இலங்கையில் இனி 2 முறை மட்டுமே ஒருவருக்கு அதிபர் பதவி.... புதிய சட்டத்திருத்தம்
கொழும்பு: இலங்கையில் இனி ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற வகையில் முக்கியமான சட்டதிருத்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
இலங்கையில் அதிபராக இருந்த ராஜபக்சே 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தார். அப்போது அவர் தனக்கு சாதகமாக பல அதிகாரங்களை கொண்டு வந்தார்.

குறிப்பாக இலங்கை ஜனாதிபதி 2 முறை மட்டுமே அந்த பதவியை வகிக்க முடியும் என்று இருந்த வரைமுறையை நீக்கினார். அதன் எதிரொலியாக 3 ஆவது முறையும் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தார்.
தற்போது புதிய அதிபர் சிறிசேனா தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறது. ராஜபக்சே செய்த பல தவறுகளை புதிய அரசு களைந்து வருகிறது.
அந்த வகையில் இலங்கை அதிபராக ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்பது உள்ளிட்ட 19 ஆவது சட்டதிருத்தத்தை (19ஏ) கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் புதிய அரசுக்கு முழுமையான பெரும்பான்மை இல்லாததால் இந்த சட்டதிருத்தம் நிறைவேறுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது.
இந்த சட்டதிருத்தம் மீது 2 நாள் விவாதம் நடந்தது. நேற்று அதன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது இந்த சட்டதிருத்தத்துக்கு ஆதரவாக 215 ஓட்டுகளும், எதிராக ஒரே ஒரு ஓட்டும் விழுந்தது. அதனால் அச்சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதுதவிர இந்த சட்டதிருத்தம் மூலம் நிர்வாகத்தின் முக்கிய பகுதிகளான தேர்தல்கள், மக்கள் சேவை, போலீஸ், நீதித்துறை ஆகியவற்றுக்கு சுதந்திரமான கமிஷன்கள் அமைக்கவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications