தமிழக மீனவர்கள் தூக்கு விவகாரம்: இந்தியாவுக்கு எதிராக இலங்கை நெஞ்சை நிமிர்த்த சீனா காரணமா?
கொழும்பு: இந்திய மீனவர்கள் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற இலங்கை துடிப்பதற்கு பின்னணியில் சீனா இருப்பதாக கூறப்படுகிறது.
சீனா சமீப காலமாக இலங்கையில் அதிக முதலீடுகளை செய்து வருகிறது. இலங்கையின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சீன நிறுவனங்கள் முதலீடுகளை கொட்டியுள்ளன. அந்த நாட்டு ரயில்வே துறைக்கு தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து கொடுக்கிறது. 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு அனல் மின் நிலையங்களை இலங்கையில் சீனா அமைத்துக் கொடுக்கிறது. நெடுஞ்சாலைகளையும் சீனாவே மேம்படுத்தி வருகிறது.

இலங்கைக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது சீனா. இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தையாக சீனா மாறியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் சீனாவின் இந்திய எதிர்ப்பு நிலைக்கு இலங்கை வெகுவாக துணைபோக தொடங்கியுள்ளது.
இதன்காரணமாகவே, மீனவர்களை போதை மருந்து கடத்தல்காரர்கள் என முத்திரை குத்தி, பொய் ஆவணங்களை உருவாக்கி நீதிமன்றத்தை நம்ப வைத்து ஐந்து தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனையும் பெற்றுத் தந்துள்ளது சீனா.
மீனவர்கள் படகில் பதிவான ஜிபிஎஸ் பதிவுகளை வைத்து பார்க்கும்போது, போதை கடத்தல் நடந்த பகுதிக்கு அவர்கள் படகு செல்லவேயில்லை என்பது உறுதியாகியுள்ளது. எனவே நீதிமன்றத்திற்கு இலங்கை போலி ஆவணங்களை அளித்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி, கொழும்பு துறை முகத்தில் சீன நீர்மூழ்கி கப்பலை நிறுத்த வசதி செய்துகொடுத்துள்ளது இலங்கை. அதே நேரம் இந்தியாவும் தனது காய் நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளது. சீனாவுக்கு எதிரியான வியட்நாமுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சென்ற நிலையில், இந்தியாவுக்கு அந்த நாட்டு பிரதமர் வருகை தந்தார்.
இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க இலங்கையை சீனா பயன்படுத்துவதற்கு பதிலடியாக சீனாவுக்கு பூச்சி காண்பிக்க, வியட்நாமை இந்தியா பயன்படுத்தக் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications