5 வயது குட்டி பையன்.. நீச்சல் குளத்தில் இழுத்து சென்ற மலைப்பாம்பு! அடுத்தநொடி சீனுக்குள் வந்த தாத்தா
சிட்னி: ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நீச்சல் குளத்தில் குளிக்கத் தயாராக இருந்த சிறுவனுக்கு வாழ்க்கையிலேயே மறக்க முடியாத கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஆஸ்திரேலியா என்றதும் நம் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது கங்காரு தான். தீவு நாடான ஆஸ்திரேலியாவில் கங்காரு மட்டுமில்லை, இன்னும் கூட பல ஆபத்தான வனவிலங்குகள் உள்ளன.
அலிகேட்டர் முதலை வகையில் தொடங்கி ரேட்பேக் ஸ்பைடர், கிரேட் ஒயிட் ஷார்க் என பல்வேறு வகையான மோசமான வனவிலங்குகள் இருக்கவே செய்கின்றன. இவை பல நேரங்களில் மனிதர்களைத் தாக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது.
அசையாமல் கிடந்த 22 அடி பைத்தான் மலை பாம்பு.. வயிற்றுக்குள் பெண் உடல்! அதிர்ந்த கிராமம்! நடந்தது என்ன
ஆஸ்திரேலியா
உலகில் உள்ள அனைத்து நாடுகளைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் கூட மனித மிருக மோதல்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அங்கு வன விலங்குகள் தாக்குதலால் ஒவ்வொரு ஆண்டும் பல நூறு பேர் உயிரிழக்கின்றனர். வனவிலங்கு தாக்குதல்களில் இருந்து தப்பவும் விலங்குகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டால், அதற்கு மின்னல் வேகத்தில் சிகிச்சை அளிக்கும் முறையையும் ஆஸ்திரேலியா உருவாக்கி வைத்துள்ள போதிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடரவே செய்கிறது. அப்படித்தான் அங்குள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மோசமான சம்பவம் நடந்துள்ளது.
5 வயது சிறுவன்
ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஐந்து வயது சிறுவன் ஒருவனை அவனை விட மூன்று மடங்கு பெரிய மலைப்பாம்பு ஒன்று நீச்சல் குளத்தில் இழுத்துச் சென்றுள்ளது. பியூ பிளேக் என்ற அந்த 5 வயது சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நியூ சவுத் வேல்ஸில் உள்ள அவர்களின் வீட்டில் நீச்சில் குளத்தின் அருகே நின்று கொண்டிருந்துள்ளான். தந்தை மற்றும் தாத்தா உடன் இணைந்து நீச்சல் குளத்தில் குளிக்கத் தேவையானவற்றை ரெடி செய்து வந்துள்ளான் அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், அங்கு 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று வந்துள்ளது.
இழுத்துச் சென்ற மலைப்பாம்பு
இதை அவர்கள் யாருமே நோட் செய்யவில்லை. திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த 10 அடி நீள மலைப்பாம்பு சிறுவன் பிளேக்கை தாக்கியுள்ளது. அவனைச் சுற்றி வளைத்த அந்த பாம்பு, நீச்சல் குளத்திற்குள் சிறுவனை இழுத்துச் சென்றுள்ளது. அந்த சிறுவனை விடப் பாம்பு மூன்று மடங்கு பெரியதாக இருந்ததால், அவனால் அதை எதிர்த்துப் போராட முடியவில்லை. பாம்பிடம் இருந்து விடுவித்துக் கொள்ளவும் முடியவில்லை. இதனால் அஞ்சிய அந்த குட்டிப் பையன் தன்னை காப்பாற்றும்படி அங்கிருந்து கத்தியுள்ளான்.
தாத்தா
தனது பேரனைப் பாம்பு ஒன்று இழுத்துச் செல்வதைப் பார்த்த பிளேக்கின் தாத்தா நொடியும் தாமதிக்காமல் நீச்சல் குளத்தில் குதித்துக் காப்பாற்றியுள்ளார். 76 வயதான அவனது தாத்தா தக்க நேரத்தில் சரியாகச் செயல்பட்டதால் அந்த சிறுவன் உயிர் பிழைத்துள்ளான். அருகிலேயே இருந்த அவனது தந்தையும் நீச்சல் குளத்தில் குதித்து சிறுவனின் காலை பாம்பிடம் இருந்து விடுவித்தார். இருப்பினும், அதற்குள் மலைப்பாம்பு அந்த சிறுவனைக் கடித்துவிட்டது.
3 மடங்கு பெரியது
இதனால் அந்த குட்டி பையன் எங்கு உயிரிழந்துவிடுவோமோ என்று ரொம்பவே பயந்துவிட்டான். மலைப்பாம்புக்கு விஷம் இல்லை என்று அவரது தந்தை சொன்ன பின்னரே இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளான். 3 மடங்கு பெரிய பாம்பு இழுத்துச் சென்ற போதிலும், நல்வாய்ப்பாக இந்த சிறுவன் சிறு காயங்களுடன் தப்பியுள்ளான். இது குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், "பிளேன் நீச்சல் குளம் அருகே நடந்து கொண்டிருந்தான். நாங்கள் இணைந்து குளிக்க ரெடியாகி கொண்டிருந்தோம்.
என்ன நடந்தது
அருகே இருந்த புதரில் அந்த மலைப்பாம்பு மறைந்து கொண்டிருந்தது. அது தனது இரைக்காகக் காத்திருந்தது. சரியாக அப்போது எனது மகன் அந்த பக்கம் செல்லவே, இரை என நினைத்து பாம்பு அவன் மீது பாம்பு பாய்ந்துவிட்டது. அவன் கால்களைச் சுற்றி நீச்சல் குளத்தில் இழுத்துச் சென்றது. அவனைப் பாம்பு ஓரிரு முறை கடித்தும் விட்டது. அதற்குள் நானும் எனது தந்தை (பிளாக்கின் தாத்தா) நீச்சல் குளத்தில் குதித்து பாம்பிடம் இருந்து அவனைக் காப்பாற்றினோம். கொஞ்ச நேரம் எங்களுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை" என்றார்.
முதல்முறை இல்லை
மனிதர்களை இரை என்று நினைத்து மலைப் பாம்புகள் விழுங்குவது என்பது மிகவும் அரிதினிலும் அரிதான ஒன்றாகும். சில வாரங்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் 54 வயதான அந்த பெண் ஒருவரை மலைப்பாம்பு விழுங்கியது. பாம்பின் வயிறு மிகப் பெரியதாக இருக்கவே, அக்கிராம மக்கள் அதைக் கொன்று வயிற்றைக் கிழித்துப் பார்த்துள்ளனர். அப்போது சில நாட்களுக்கு முன்பு மாயமான அந்த பெண்ணின் சடலம் அங்கிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.