சென்னை: சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வார்டனை தாக்கிவிட்டு 10 பேர் தப்பி ஓட்டம்
சென்னை: கெல்லிஸ் பகுதியில் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 10 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் பகுதியில் 18 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளிகளை அடைக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி எனப்படும், சிறுவர்கள் சிறை உள்ளது.
இங்கு அடைக்கப்படும் குற்றவாளிகளுக்கு பள்ளிக்கூடம், தொழிற்கூடம், விளையாட்டு கூடம் உள்பட பல்வேறு சீர்திருத்த மையங்கள் உள்ளன. இங்கு அடைக்கப்பட்டிருக்கும் இளம் குற்றவாளிகள் தங்களை ஒரு குற்றவாளி என்று எண்ணக்கூடாது என்பதற்காக, அரசு இங்கு பாதுகாப்பு பணியில் போலீசாரை நியமிப்பதில்லை. காவலாளிகளே இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
கெல்லீஸ் சிறுவர்கள் சிறையில் 200 சிறுமிகளும், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 25 பேரும், 16 வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 35 பேரும் தனித்தனி அறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 10 பேர் நேற்றிரவு சிறை வார்டன்களை டியுப் லைட்டினால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து சிறுவர்கள் அடிக்கடி தப்பிச்செல்வது தொடர்கதையாகிவருகிறது.