"சிம்பு" உள்பட 14 டுபாக்கூர் டாக்டர்கள் கைது.. தர்மபுரியில்!
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 14 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மலைப்பகுதிகளை அதிகம் கொண்டதும் கல்வி சுகாதார வசதிகளில் பின்தங்கிய மாவட்டமான தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லோகநாதனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதையடுத்து தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீஸார் நேற்று போலி டாக்டர்கள் குறித்து கிராமப்புறங்களில் உள்ள மருதுவமனைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் காரிமங்கலத்தை அடுத்த பேகாரஹள்ளியில் முறையான மருத்துவ படிப்பின்றி பொதுமக்களுக்கு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்த தர்மபுரி அடுத்த நாயக்கன்கொட்டாயை சேர்ந்த சிவன் என்பவரை காரிமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.
தொப்பூரில் முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த முனுச்சாமி, சங்கரன் ஆகியோரை தொப்பூர் போலீஸார் கைது செய்தனர்.
மேலும் அதியமான்கோட்டையில் ஜெயராமன், கோட்டப்பட்டியில் சிலம்பரசன், பாப்பாரப்பட்டி போலீஸ் காலனியில் வெங்கடேசன், ஏரியூரில் சிவகுரு, சீனிவாசன், பாலக்கோட்டில் சுப்பிரமணியன், கம்பைநல்லுாரில் பிரபு, சரவணன் உள்ளிட்ட 14 பேர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து அனைவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து மருத்துவ உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் விடிய, விடிய சோதனை நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications