கன்னியாகுமரி கடலில் மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல் பகுதியில் மீன்பிடி தடை காலத்தில், அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த காலங்களில் கைது செய்துவந்த நிலையில் இப்போது இலங்கை அந்த அனுபவத்தை பெற்றுள்ளது.
மீன்களின் இனப்பெருக்கத்துக்காக தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை நாட்டு மீனவர்கள் சிலர் இரு படகுகளில் கன்னியாகுமரி அருகேயுள்ள கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை வீரர்கள், அந்த படகுகளை சுற்றி வளைத்து மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது இரு படகுகளிலும் தலா 400 கிலோ அளவுக்கு மீன்கள் இருப்பது தெரியவந்தது. விதிமுறைகளை மீறியதற்காக இரு படகுகளிலுமிருந்த 14 இலங்கை மீனவர்களை கைது செய்த கடற்படையினர், அடுத்த கட்ட விசாரணைக்காக, அவர்களை தூத்துக்குடியிலுள்ள தமிழக கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர். கடந்த 7ம்தேதி ஆந்திர கடல் பகுதியில் மீன் பிடித்த 31 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications