விழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் கொடுமைக்குள்ளான 14 வயது மகள், தாய் நினைவு திரும்பவில்லை
புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் கொடுமைக்கு உள்ளான 14 வயது மகள் மற்றும் தாக்கப்பட்ட அவரது தாய் ஆகியோருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை என்று அவர்கள் சிகிச்சை பெற்றுவரும், புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கரராவ் படே பேட்டியளித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆராயி. கணவரை இழந்தவர். தலித் பிரிவை சேர்ந்தவர்.

சில தினங்கள் முன்பாக இவரது வீடு புகுந்த வெறிக்கும்பல், சிறுவன் என்றும் பாராமல், ஆராயியின் 8 வயது மகனை, அடித்தும், வெட்டியும் கொலை செய்துள்ளனர்.
ஆராயியின் 14 வயது மகள் மிகக் கொடூரமான முறையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஆராயியும் தாக்கப்பட்டுள்ளார். ஆராயி, அவரது மகள் ஆகிய இருவரும் நினைவற்ற நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கரராவ் படே இன்று அளித்த பேட்டியில், ஆராயி மற்றும் அவரது மகள் இன்னும் சுய நினைவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே தீவிர சிகிசசை பிரிவின்கீழ் ஆராயி மற்றும் அவரது மகள் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சம்பவம் நடந்து 4 நாட்களாகியும், இன்னும் கூட குற்றவாளிகளில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications