திருச்சி கஸ்டம்ஸ் அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் திடீர் மாயம்... சுட்டது யார்??
திருச்சி: திருச்சியில் உள்ள சுங்க அலுவலகத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 15 கிலோ தங்கத்தை காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இத்தனைக்கும் பாதுகாப்புப் பெட்டகம் உடைக்கப்படவில்லை, தங்கத்தை மட்டும் காணவில்லை என்பதால் இது உள்ளடி வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து சிபிஐயிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய பஸ்நிலையம், கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையில் மத்திய அரசின் சுங்கத்துறை ஆணையர் அலுவலகம் உள்ளது. திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட மத்திய மண்டலத்துக்குட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் திருச்சி விமான நிலையம் வழியாகவும், கடலோர மாவட்டங்களிலும் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்க கட்டிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருச்சி சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருக்கும்.

இது தொடர்பான வழக்கு முடியும் வரை அவ்வப்போது கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது தேவையான சமயத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து தங்கக் கட்டிகள் மற்றும் பொருட்களை எடுத்து சென்று அதிகாரிகள் கோர்ட்டில் ஒப்படைப்பது வழக்கம். ஒவ்வொரு கடத்தல் சம்பவத்திலும் பிடிபடும் தங்கக் கட்டிகள் மற்றும் பொருட்கள் தனித்தனியாக பெட்டிகளில் வைக்கப்படும். அதன்மேல் வழக்கு குறித்த குறிப்புகள் எழுதி வைக்கப்பட்டு இருக்கும்.
இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 18.5 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த தங்கக் கட்டிகளை திருச்சி சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து இருந்தனர். இது தொடர்பான வழக்கு திருவாரூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
நேற்று முன்தினம் காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திருவாரூர் கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து 18.5 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் வெளியே எடுத்தனர். ஆனால் அவற்றின் எடை குறைவாக இருந்தது. உடனே அந்த தங்க கட்டிகளின் எடையை சரிபார்த்தபோது, அதில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கம் குறைந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் சுங்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசலு இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசில் நேற்று முன்தினம் மாலை புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக சுங்கத்துறை அலுவலக ஊழியர்கள் 10 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
திருச்சியில் உள்ள சுங்கத்துறை ஆணையர் அலுவலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருவதால், 15 கிலோ தங்கம் மாயமான வழக்கினை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இது தொடர்பாக சுங்கத்துறை ஆணையர் கே.சி.ஜானி, உதவி ஆணையர் வெங்கடேசலு ஆகியோர் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும், தங்கம் மாயமானது குறித்து சி.பி.ஐ. அலுவலகத்தில் புகார் அளிக்கவும் உள்ளனர். இதையத்து சி.பி.ஐ. அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாகவும், சி.பி.ஐ. அதிகாரிகள் திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர்.
பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்படாமல் தங்கம் மட்டுமே மாயமாகி உள்ளது. இதனால் போலீசாரும், சுங்கத்துறை அதிகாரிகளும் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர். மர்ம மனிதர்கள் யாரேனும் மாற்று சாவி மூலம் பெட்டகத்தை திறந்து இருப்பார்களா? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தங்கம் மாயமான சுங்கத்துணை ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று காலை போலீசார் சென்று விசாரித்தனர். அங்கு நுழைவு வாசலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் முக்கியமான பாதுகாப்பு பெட்டகம் உள்ள அறை முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை என தெரிகிறது. வழக்கமாக ஒரு சில அதிகாரிகள் மட்டுமே பாதுகாப்பு பெட்டகம் உள்ள அறைக்கு சென்று வருவார்கள்.
ஆனால் அங்கு கண்காணிப்பு கேமரா இல்லாததால் குறிப்பிட்ட அதிகாரிகளை தவிர, வேறு யாரெல்லாம் அந்த அறைக்குள் சென்று வந்தனர் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், மாயமான தங்க கட்டிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே பெட்டகத்தில் வைக்கப்பட்டதால் சரியாக எந்த தேதியில் மாயமாகி உள்ளது என்பதையும் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் 15 கிலோ கோடி மதிப்பிலான தங்கம் எங்கே? என்பது மர்மமாக உள்ளது.












Click it and Unblock the Notifications