சிவகாசி : பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 2பேர் படுகாயம்
சிவகாசி: சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் இன்று காலையில் நமஸ்கரித்தான்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அறைகள் சேதமடைந்து 2 பேர் படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகாசியில் இருந்து வந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்தில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு உற்பத்தி செய்யும் சிவகாசியில் இதுபோன்ற வெடிவிபத்துக்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன. இதற்கான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தொடர்கதையாகும் பட்டாசு விபத்துகள்:
கடந்த 2005ம் ஆண்டு சிவகாசி மீனாம்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 20 பேர் மரணமடைந்தனர்.
2009ம் ஆண்டு சிவகாசி நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் ஸ்ரீகிருஷ்ணா பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
2010ம் ஆண்டு சிவகாசியில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி விருதுநகர் அருகில் நடைபெற்ற பட்டாசு விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
2011 ஏப்ரல் மாதம் சிவகாசியில் நடைபெற்ற மற்றொரு விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.
2011 ஜூன் மாத்தில் தூத்துக்குடி - குறும்பூர் அருகே நடைபெற்ற பட்டாசு விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முதலிப்பட்டியில் நடந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.
2012 டிசம்பர் மாதம் 25ஆம் தேதி சேலம் மாவட்டம் மேச்சேரி என்ற இடத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
2013- கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி சிவகாசி அருகே நாரணபுரத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
2016 - ஆமத்தூர் அருகே காரிசேரி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
முதலிப்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பவத்திற்குக் பின்னர் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், வெடிவிபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகி வருகின்றன என்பதே வேதனை.












Click it and Unblock the Notifications