திருச்சி அகதிகள் தற்கொலை முயற்சி விவகாரம்... 2 அகதிகள் கைது
திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள 23 பேர் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மத்திய சிறையிலுள்ள சிறப்பு அகதிகள் முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையை இலங்கை தமிழர்கள் 31 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் தங்கள் மீதான குற்ற வழக்குளை விரைந்து விசாரித்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 15 ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 4வது நாளாக கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில், அவர்களில் 23 பேர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், 5வது நாளான நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்த ஈழ நேரு, ஞானஉதயன், சந்திரகுமார், ஸ்ரீஜெகன், மகேஷ்வரன், சிவனேஷ்வரன், ராஜேந்திரன் ஆகியோர் மயங்கிய நிலையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த மருத்துவக் குழுவினர், அவர்களது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறி திருச்சி அரசு மருத்தவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
திருச்சி அரசு மருத்தவமனையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த 7 பேரும் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு இருப்பதை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர். இவர்கள் தவிர மற்ற 19 பேர் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். அவர்களின் உடல்நிலையும் மோசமடைந்ததை தொடர்ந்து சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நிலைமை மோசமாகி வருவதைத் தொடர்ந்து தற்போது ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளரான ஈழ நேரு, கருணைராஜா ஆகியோரை நேற்றுக் கைது செய்தனர். அகதிகளை போராட தூண்டியது, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, திருச்சி நீதித்துறை 2வது நீதிபதி நீதிபதி ராஜாராம் முன்பு ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.