அதிமுகவின் இரு கோஷ்டி எம்எல்ஏக்களிடமும் திடீர் தடுமாற்றம் தெரிகிறதே, நீர் கவனித்தீரா?
எடப்பாடி மற்றும் தினகரன் தரப்பு ஆதரவாளர்களாக அறியப்பட்ட அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதியும், பெருந்துறை எம்எல்ஏ தோப்பு கே வெங்கடாசலமும் தற்போது நடுநிலையாளர்கள் என கூறிக்கொள்கிறார்கள்.
சென்னை: அதிமுகவின் 3 அணிகளில், இரு அணிகள் பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் கடந்த திங்கள்கிழமை அன்று இணைந்தனர். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பினருக்கு கட்சியில் முக்கியத்துவம் வழங்கும் வகையில் கட்சியில் முக்கிய பொறுப்புகளும், ஆட்சியில் பங்களிக்கும் வகையில் துணை முதல்வர் பதவி, அமைச்சரவை உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக இணைப்பு நிகழ்ச்சியின் போது பொதுக் குழுவை கூட்டி விரைவில் சசிகலாவும் நீக்கப்படுவார் என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. அறிவித்தார்.
சசிகலா, தினகரன் இல்லாமல் கட்சி இல்லை என்று கூறி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் புதுவையில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ரத்தினசபாபதி பல்டி
இந்நிலையில் எடப்பாடி அணியில் இருந்த அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் எந்த அணியிலும் இல்லை. அதிமுகவில் உள்ளேன். சசிகலாவும், தினகரனும் இல்லாமல் கட்சி இல்லை என்று தடாலடியாக கூறினார்.

நடுநிலைவாதியான தோப்பு
இதேபோல் பெருந்துறை எம்எல்ஏ-வான தோப்பு வெங்கடாசலம் இத்தனை நாள்களாக தினகரன் அணியில் இருந்து வந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை இன்று அவர் சந்தித்தார். அப்போது முதல்வர் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். முதல்வரும், துணை முதல்வரும் 19 எமஎல்ஏ-க்களை அழைத்து பேச வேண்டும். ஏன் தினகரனையும் அவர்கள் அழைத்து பேச வேண்டும். மேலும் நான் எந்த அணியிலும் இல்லை என்றார்.

பெரும்பான்மை பலம்
தற்போது அதிமுக அணிகள் இணைந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 113 எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க 117 பேர் தேவை என்பதால் அவர்கள் விரைவில் தங்கள் பக்கம் வருவர் என்று கூறுகின்றனர் எடப்பாடி தரப்பினர். இந்நிலையில் எம்எல்ஏ-க்கள் தோப்பு வெங்கடாசலமும், ரத்தின சபாபதியும் நடுநிலையாளர்களாக மாறிவிட்டதை பார்க்கும்போது எடப்பாடி அணிக்கு இருவரின் ஆதரவு இல்லை என்பது மறைமுகமாக உணர்த்துகிறது.

ரிசார்ட் அரசியல்
இருவரும் பாலுக்கும் காவல், பூனைக்கும் நண்பன் என்பதை போல பேசுகிறார்கள். ரிசார்ட் அரசியல் உச்சம் தொட்டுள்ள நிலையில் இதுபோல மேலும் பல எம்எல்ஏகளும் தாங்கள் யார் பக்கமும் இல்லை என கூற வாய்ப்புள்ளது. அப்போது, எங்கள் பக்கம் வாருங்கள் என இரு தரப்புமே இவர்களை அணுகி பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இதையே அந்த எம்எல்ஏக்களும் எதிர்பார்ப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications