சென்னையில் 2 புதிய மெட்ரோ ரயில் சேவை.. முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்!
2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று மெட்ரோ ரயில் சேவையின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹர்தீப்சிங் உள்ளிட்டோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவை துவங்கி வைத்தனர்.
விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, சென்னையின் புதியதாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை துவங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல்-நேரு பூங்கா மெட்ரோ ரயில் சேவையினையும் அதேபோல சின்னமலை - டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில்சேவையினையும் தொடங்கி வைத்தார்.
இந்த மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களில், 6 குளிரூட்டப்பட்ட சுரங்கப்பாதை ரயில் நிலையங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் பாதுகாப்புக்காக நடைமேடை திரைக்கதவு வசதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ரெயில்வே பிளாட்பார்ம் முற்றிலும் மூடப்பட்டு, ரயில் வரும்போது மட்டும் அதற்கான திரைக்கதவுகள் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2020 ஜூன் மாதத்துக்குள் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.