நெல்லை மாவட்டத்தில் 25.34 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை- கலெக்டர்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 25.34 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நெல்லை மாவட்டத்தில் இதுவரை 25 லட்சத்து 33 ஆயிரத்து 936 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் ஆதார் எண் வழங்கும் பணியை நிறைவு செய்ய திட்டமிட்டு இதற்காக ஆதார் பதிவுகள் மேற்கொள்ளும் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஆதார் அட்டைகள் எடுக்க இதுவரை நடைமுறையில் இருந்து வந்த டோக்கன் முறை தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டை வைத்து ஆதார் எண் பெறலாம். அந்த கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவுகள் செய்வதற்கான குடும்ப அட்டை படிவத்தை நிரப்பி கொடுத்து உடனடியாக ஆதார் பதிவுகளை செய்து கொடுத்து ஆதார் எண் பெறலாம்.
ஆதார் எண் பெறுவதற்கு நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்கள், நகரசபை அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், புகைப்படம் எடுக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இதுவரை ஆதார் எண் பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் இந்த மையங்களில் சென்று ஆதார் எண் பெறுவதற்கு புகைப்படம் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications