கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி பணம் கைமாறிய வழக்கு- அலற வைக்கும் 5 சாட்சிகள்!
சென்னை: கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி பணம் கைமாறியது தொடர்பான அமலாக்கப் பிரிவின் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சிபிஐ தரப்பு கூடுதலாக ஐந்து சாட்சியங்களை சேர்த்திருப்பது குற்றம்சாடப்பட்டுள்ளோரை அலற வைத்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி பணம் கைமாறியதில் அன்னிய செலாவணி மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் கடந்த 17ந் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது.
இதில் ஐந்து பேரைக் கூடுதல் சாட்சிகளாக நிறுத்த சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. ஆனால் இந்த ஐந்து பேரையும் சாட்சியமாக சேர்க்கக் கூடாது என்று கனிமொழி உள்ளிட்டோர் தரப்பு கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தது.

அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநர் சத்யேந்திர சிங், டாக்டர் ராஜேஸ்வர்சிங், நவில் கபூர், கோடம்பாக்கம் இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் மணி, கலைஞர் டிவி நிதி மேலாளர் ராஜேந்திரன்தான் அந்த ஐந்து சாட்சிகள்.
வினோத் கோயங்கா, ராஜீவ் அகர்வால், சரத்குமார் மற்றும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சாட்சிகளாக உள்ள பி.அமிர்தம், ஆசீர்வாதம் ஆச்சாரி ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றவர்தான் அமலாக்கப் பிரிவின் உதவி இயக்குநரான சத்யேந்திர சிங்.
அதேபோல் அமலாக்கப் பிரிவின் துணை இயக்குநரான டாக்டர் ராஜேஸ்வர்சிங், ஆசிப் பால்வா, கறீம் மொராணி ஆகியோரை விசாரித்தவர். மேலும் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான தற்கொலை கொண்ட சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்தியவரும் இந்த ராஜேஸ்வர்சிங்தான்.
மத்திய தகவல் ஒளிபரப்புத் துறையில் தொலைக்காட்சிகளுக்கான செயற்கைக்கோள் பிரிவில் பொறுப்பு[சார்புச் செயலாளராக வகித்தவர் நவில் கபூர். இவர் கலைஞர் டி.விக்குச் செயற்கைக்கோள் இணைப்புக்கு அனுமதி கொடுத்த விவகாரம் குறித்தும் கலைஞர் டி.விக்கு அப்போது இருந்த தகுதி குறித்தும் சாட்சியம் கூற சி.பி.ஐ அழைத்துள்ளது.
கோடம்பாக்கம் இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளரான டி.மணி, 2007ம் ஆண்டு கலைஞர் டி.வி தொடங்கப்பட்ட சமயத்தில், கடன் விவகாரங்கள் சம்பந்தப்பட்ட கடிதங்கள், ஆவணங்கள் குறித்து சாட்சியம் அளிக்க இருக்கிறார். 2007ம் ஆண்டு கலைஞர் டி.வியில் நிதி மேலாளராக இருந்தவர் ஜி.ராஜேந்திரன்.
இந்த புதிய சாட்சிகளை ஏற்கக் கூடாது என்று கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டோர் வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்த்துப் பார்த்தனர். ஆனால் நீதிபதி சைனியோ, ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூடுதல் ஆவணங்கள் கிடைத்துள்ளன. சி.பி.ஐ விசாரணையில் தவறுதலாக விடுபட்டு இருக்கலாம்.
சிலரை விசாரணை செய்யாமல் விட்டு இருக்கலாம். மனிதத் தவறுகள் ஏற்படுவது வழக்கம். இது குற்றவாளிகளுக்குச் சாதகமாகவும் அரசுத் தரப்புக்கு பாதகமாகக்கூட போக வாய்ப்பு உண்டு. இதை நிரப்ப தவறக் கூடாது. எந்தச் சாட்சியங்களையும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு அரசுத் தரப்பு கொண்டுவரலாம். சிலசமயம் நீதிமன்றமே சுயமாகக்கூட சில சாட்சிகளை அழைக்கும். தாமதமாகிவிட்டது என்பதற்காக சாட்சிகள் வருவதைத் தடுக்க முடியாது.
கலைஞர் டி.விக்கு ஷாகித் உஸ்மான் பால்வா, வினோத் கோயங்கா போன்றவர்கள் ரூ.200 கோடி கொடுக்கப்பட்டுள்ள ஊழல் கையூட்டில் கனிமொழி, சரத்குமாருக்கு உள்ள பங்கை இரண்டு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து உள்ளனர். இதில் தகவல் ஒளிப்பரப்புத் துறை அதிகாரி நவில் கபூர், வங்கி அதிகாரி டி.மணி, ஜி.ராஜேந்திரன் போன்றவர்கள் அளித்துள்ள ஆவணங்களில் கலைஞர் டி.வியில் கனிமொழியின் பங்கு எந்த அளவு இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.
இது அரசுத் தரப்புக்கு முக்கியமானது என்பதால், இந்தச் சாட்சிகளை விசாரிக்க உத்தரவிடுகின்றேன் என்று அதிரடியாக கூறிவிட குற்றம்ச்சாட்டப்பட்டோர் ஆடிப் போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications