சட்டசபை தேர்தல்: களத்தில் 3,776 வேட்பாளர்கள்..5.82 கோடி வாக்காளர்கள்.. நாளை வாக்குப் பதிவு !
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.. தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் முழு அளவிலான நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெற இருக்கிறது. மே 19-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
கேரள மாநிலத்தில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளிலும் 2.61 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அங்கு 109 பெண்கள் உள்பட 1,203 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கேரள மாநிலத்திலும் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகுதிகளில் 9.43 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 300-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரியிலும் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
அதேபோல் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் ஆண் வேட்பாளர்கள் 3,454 பேர், பெண் வேட்பாளர்கள் 320 பேர், திருநங்கைகள் 2 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அரவக்குறிச்சியில் 36 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். பெரம்பூரில் 33 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து 5.82 கோடி வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.88 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 2.93 பேரும் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.02 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக கந்தர்வகோட்டையில் 1.85 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் 21.05 லட்சம் பேரும், திருநங்கைகள் 4,720 பேரும் உள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலில் 1.40 லட்சம் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 1.50 லட்சம் மின்னணு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மொத்தம் 66,007 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 27,961 வாக்குச்சாவடிகள் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். 5,417 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 1,233 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 4.75 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.
தேர்தல் பாதுகாப்புக்காக சுமார் 30,000 துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் மே 16 ஆம் தேதிக்குப் பதில் மே 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டது குறித்து புகார்கள் வந்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.