கொள்ளையடிச்சாவது தண்ணி அடிப்போம்ய்யா.. கொடூர குடிகாரர்களைப் பாருங்கள்!
செந்துறை: கையில் காசு இல்லாததால் கொள்ளையடித்து தண்ணி அடித்த ஒரு கும்பலைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேருமே தண்ணி அடிக்க வரும்போது டாஸ்மாக் பாரில் வைத்து நண்பர்களானவர்களாம். நான்கு பேரும் அடிக்கடி குடிக்க வருவார்களாம், குடிக்க காசு இல்லாததால் கொள்ளையர்களாக மாறி விட்டனர்.
செந்துறை அருகே உள்ள பரணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (21), சம்பத் (23). இவர்கள் இருவரும் அடிக்கடி டாஸ்மாக்கில் மது குடிக்கச் செல்வார்கள். அப்போது திருக்கடம்பூரை சேர்ந்த தனபால் (33) என்பவர் டாஸ்மாக் பாரில் நண்பராக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து மூவரும் சேர்ந்து டாஸ்மாக் பாரில் மது குடிப்பார்களாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூவரும் சேர்ந்து செந்துறையில் ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது கொண்டு வந்த பணம் காலியாகி விட்டது. ஆனால் அவர்களுக்கு மது தாகம் தீரவில்லை. என்ன செய்வது என்று யோசித்தனர்.

உடனே தங்களிடம் இருந்த செல்போனை ஒரு கடையில் சென்று விற்றனர். பின்னர் அந்த பணத்தில் மது குடித்தனர். மீண்டும் பணம் தீர்ந்து விடவே நாளைக்கு மது குடிக்க பணத்திற்கு என்ன செய்வது என் மூவரும் யோசித்தனர்.
மது குடிப்பதற்காக யாரிடமும் பணம் வாங்க முடியாது, கொள்ளையடிப்பது தான் ஒரே வழி மூவரும் முடிவு செய்தனர். பரணம் கிராமத்திற்குள் சென்று எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம் என நோட்டமிட்டனர். அப்போது சின்னத்துரை என்பவரது வீட்டில் அவரது மனைவி இளவரசி மட்டும் தனியாக இருப்பதை கண்டு பிடித்தனர். சின்னத்துரை வெளிநாட்டில் வேலை செய்கிறார்.
நேற்று முன்தினம் இரவு இளவரசி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த டாஸ்மாக் நண்பர்கள் மூவரும் இளவரசியிடம் இருந்து தாலி செயின் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பினர். இது குறித்து இரும்புலி குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
பின்னர் நண்பர்கள் மூவரும் கொள்ளையடித்த செயினை செந்துறையில் உள்ள ஒரு கடையில் விற்றனர். பின்னர் அந்த பணத்தில் மது குடித்தனர். அப்போது தங்கள் போனை விற்றது நினைவுக்கு வந்தது. கொள்ளையடித்த பணம் கையில் இருப்பதால் போனை மீண்டும் வாங்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு வந்தது.
செல்போனை விற்ற கடைக்கு சென்று போனை தங்களிடம் மீண்டும் தந்து விடுமாறும் அதற்கு பணம் தருவதாகவும் கூறினர். இதில் சந்தேகம் அடைந்த கடை ஊழியர் போலீசாருக்கு தகவல் தந்தார்.
உடனடியாக அங்கு வந்த இரும்புலியூர் இன்ஸ்பெக்டர் சமரசம், எஸ்.ஐ. நந்தகுமார், சுமதி ஆகியோர் டாஸ்மாக் நண்பர்கள் மூவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களின் கொள்ளை விவரம் வெளிவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications