நிர்மலா தேவி விவகாரம் : சரணடைந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு 4 நாள் சிபிசிஐடி காவல்
நிர்மலா தேவி விவகாரத்தில் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு 4 நாள் சிபிசிஐடி காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் : மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு 4 நாள் சிபிசிஐடி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசி, அவர்களை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதில், மதுரை பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீஸார் தேடி வந்தனர்.
இதில் முருகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 5 நாள் சிபிசிஐடி காவல் அளித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அவரிடம் 2வது நாளாக இன்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தேடப்பட்டு வந்த, முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி நேற்று மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இதனையடுத்து இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருப்பசாமியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் மனுத்தாக்கல் செய்து இருந்தனர். இதனையடுத்து கருப்பசாமிக்கு 4 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி கீதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications