நாமக்கல் அருகே தனியார் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
நாமக்கல்: நாமக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், தந்தை, மகள், மகன் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல்லை அடுத்த கொண்டிசெட்டிபட்டி கணபதி நகரைச் சேர்ந்தவர் முருகன். ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வரும் இவர், இன்று மாலை கரூர் அருகே உள்ள தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் மனைவி தங்கமணி, மகள் பூர்வி, மகன் சதிஷ் ஆகியோருடன் சென்றுள்ளார்.
இவர்கள் சென்ற வாகனம் லத்துவாடி கிராமம் அருகே சென்றபோது, எதிரே மோகனூரில் இருந்து அதிவேகமாக வந்த தனியார் பேருந்து முருகன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது. இதில் முருகன், அவரது மனைவி தங்கமணி, குழந்தைகள் பூர்வி, சதீஷ் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தனர். இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.