வங்கியில் பணம் எடுக்க காத்திருந்தவர் சுருண்டு விழுந்து பலி… மதுரையில் பரபரப்பு
மதுரையில் உள்ள வங்கி ஒன்றில் பணம் எடுப்பதற்காக காத்திருந்த ஒருவர் சுருண்டு விழுந்து பலியானார்.
மதுரை: மதுரை வங்கியில் ஒன்றில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து மரணமடைந்தார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு சரியாக ஒரு மாதம் முடிவடைந்துள்ளது. இந்த ஒரு மாதமும் மக்கள் படும் துன்பம் சற்றும் குறையவில்லை. ஏடிஎம்களில் இருந்து 2000 ரூபாய்தான் எடுக்க முடியும் என்ற சூழலில் ஏடிஎம் மையங்களில் அன்றாடம் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. அதே போன்று வங்கிகளிலும் கூட்டம் அலைமோதியே காணப்படுகிறது.

இந்த ஒரு மாதத்தில் மட்டும் பணம் எடுப்பதற்காகவும், பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காகவும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் போதும், கூட்ட நெரிசலில் சிக்கியும் இந்தியா முழுவதும் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மதுரையில் உள்ள வங்கி ஒன்றில் பணம் எடுக்க காத்திருந்தவர் சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார். மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள கனரா வங்கிக்கு அப்பகுதியில் வசிக்கும் 45 வயதான அண்ணாமலை என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அங்கு பணம் எடுக்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். இவரும் வரிசையில் நின்றார்.
நீண்ட நேரமாக வரிசையில் நின்றதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் நின்ற இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி முதலுவி செய்ய முயன்ற போது அவர் உயிர் பிரிந்தது தெரிய வந்தது. இதனால் அந்தப் பகுதி மக்களும், உறவினர்களும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.
அவர் உயிர் இழந்தது பற்றி விசாரித்த போது, நீண்ட நேரம் வரிசையில் நிற்க நேரிட்டதால் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications