தமிழக மீனவர்கள் 46 பேர் விடுதலை: இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு!
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 46 பேரை விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
45 நாள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்து கடந்த 31 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 33 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இரு நாட்களுக்கு பின் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் சென்ற 6 விசைப்படகுகளை விடுவிக்கவில்லை.
கடந்த 8 ஆம் தேதி ராமேஸ்வரம், மண்டபம், மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 87 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இரு பிரிவுகளாக பிடித்து சென்றனர். பிடித்து செல்லப்பட்ட மீனவர்களில் 82 பேர் மட்டும் இலங்கை மன்னார் மற்றும் ஊர்காவல்துறை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். சிறை வைக்கப்பட்ட 82 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று காலை ஊர்காவல் துறை நீதிமன்றம் 36 மீனவர்களை விடுவித்து உத்தரவிட்டது. ஆனால், மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 46 பேர் விடுவிக்கப்டவில்லை. மேலும், அவர்கள் சென்ற 18 விசைப்படகுகளை விடுவிப்பது குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
46 மீனவர்கள் விடுதலை
இந்நிலையில் அனுராதபுரத்தில் அடைக்கப்பட்டிருந்த அந்த 46 மீனவர்களையும் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.