வறட்சிக்கு மேலும் ஒரு விவசாயி பலி.. ஒரே நாளில் 7 விவசாயிகள் மரணம்.. தொடரும் சோகம்
கடும் வறட்சிக்கு மேலும் ஒரு விவசாயி பலியாகியுள்ளார். இன்று ஒரு நாளில் மட்டும் 7 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 7 விவசாயிகள் கடும் வறட்சிக்கு பலியாகியுள்ளனர். இதனால் விவசாய பெருங்குடி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பொங்கல் நெருங்கி வரும் வேளையில் விவசாயிகளின் வீடுகள் இழவு வீடுகளாக மாறி வருகின்றன. தமிழகத்தில் நிலவி வரும் கடும் வறட்சிக்கு இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை அருகே வெளுகனந்தல் கிராமத்தில் வசித்து வந்தார் விவசாயி சின்னத்தம்பி. இவர் 2 ஏக்கர் பரப்பளவில் வேர்கடலை மற்றும் உளுந்து ஆகிய பயிர்களை சாகுபடி செய்திருந்தார். தண்ணீர் இல்லாததால் பயிர்கள் முற்றிலும் கருகி நாசமாகின. இதனால் மன வேதனையில் இருந்த சின்னத்தம்பிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் 7 விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்புக் காரணமாக மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தடுக்க என்ன செய்யப் போகிறது தமிழக அரசு என்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.