அயப்பாக்கத்தில் மர்மநபர்கள் கைவரிசை: 85 பவுன் நகை கொள்ளை
அயப்பாக்கத்தில் வீடு புகுந்த மர்ம நபர்கள் 85 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
Recommended Video
சென்னை: திருவள்ளூர் அடுத்த ஆவடி அயப்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 85 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திருவள்ளூரை அடுத்த ஆவடி அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் லிங்கராஜ். புத்தக கடை நடத்திவருகிறார்.
அவரது மகன் பணிக்காக வெளிநாடு செல்வதை அடுத்து அவரை வழி அனுப்ப குடும்பத்துடன் வீட்டை பூட்டிக் கொண்டு நேற்று இரவு 11 மணிக்கு விமான நிலையம் சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 85 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
காலையில் வீடு திரும்பிய லிங்கராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.