காவிரியில் திறந்துவிடப்பட்ட நீர் ஒகேனக்கல் வந்தது.. அருவிகளில் வெள்ளப் பெருக்கு!
ஒகேனக்கல்: காவிரியில் கர்நாடகம் திறந்துவிட்ட 9700 கனஅடி நீர் நேற்று ஒகேனக்கல் வந்தடைந்தது.
காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தது.

இந்த உத்தரவை முதல் செயல்படுத்த மறுத்த கர்நாடகம், பின்னர் வேறு வழியின்றி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரி ஆற்றில் கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று தமிழகத்தில் காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1,300 கனஅடி வந்து கொண்டு இருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 700 கனஅடியாக அதிகரித்தது.
இதனால் ஒகேனக்கல் அருவிகளில் நீர்ப் பெருக்கெடுத்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்குமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications