திருமங்கலத்தில் பஸ் டிரைவரின் உதட்டை கடித்து குதறிய மற்றொரு பஸ் டிரைவர்
மதுரை: திருமங்கலத்தில் பேருந்து டிரைவர் ஒருவரின் உதட்டை மற்றொரு பேருந்தின் டிரைவர் கடித்து குதறிய சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் செங்குளம் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் அழகுமலை கண்ணன்(42). பேருந்து டிரைவர். அவர் இன்று காலை 9 மணிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்தை திருமங்கலத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார். திருமங்கலத்தில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் கண்ணன் ஓட்டிய பேருந்துக்கு வழிவிடாமல் விருதுநகரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து சென்றது.
விரைவு பேருந்தை திருமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் ஓட்டினார். வழிவிடாமல் பேருந்தை ஓட்டிச் சென்ற கணேசனுக்கும், கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன் கண்ணனின் உதட்டை கடித்து குதறினார். உதட்டில் இருந்து ரத்த கொட்ட வலியால் கண்ணன் அலறினார்.
இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கண்ணன் திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.