மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி: பொதுமக்கள் பீதி
நெல்லை அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நெல்லை: நெல்லை அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெண் உயிரிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே அருணாசலம் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ். ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவரது மனைவி காளிஸ்வரி. இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான்.

காளீஸ்வரி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.
இந்நிலையில் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள அவர்களது குலதெய்வ கோயிலுக்கு ஆட்டோவில் வந்தனர். அப்போது காளிஸ்வரிக்கு காய்ச்சல் அதிகரிக்கவே சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சைப்பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் டெங்கு காய்ச்சலால் இறந்தாரா, அல்லது வேறு எதுவும் காரணமா என்பது மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தெரிய வரும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன காய்ச்சல் என்பதை கண்டுபிடித்து அரசு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications