செயற்கை கருத்தரிப்பில் இப்படி ஒரு ஆபத்து வருமா? புதுச்சேரியில் தாய், 2 குழந்தைகள் பலியான சோகம்
செயற்கை முறையில் கர்ப்பம் தரித்த தாயும், அவரது 2 குழந்தைகளும் சிசேரியன் ஆபரேஷனில் உயிரிழந்து விட்டனர்.
புதுச்சேரி: டெஸ்ட் டியூப் பேபி எனப்படும் செயற்கை முறை கருத்தரிப்பில் குழந்தை பெற்றுக் கொள்ள அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை வெளியே எடுக்க முயன்றபோது பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் குழந்தையும், தாயும் உயிரிழந்துவிட்டனர்.
புதுவை முத்தரையர்பாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். தனியார் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா (24). பொறியியல் பட்டதாரி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.
ஆனால் குழந்தை இல்லை. மருத்துவர்களிடம் பரிசோதனை செய்ததில் இயற்கை முறையில் கருத்தரிக்க வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. எனவே டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இருவரும் முடிவு செய்தனர்.

இரு கருக்கள்
விக்னேஷின் சொந்த ஊர் திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனையில் இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் திவ்யா கர்ப்பமானார். 2 கரு உருவாகி இருந்தன. பின்னர் அவர் புதுவைக்கு அழைத்து வரப்பட்டார்.

பிரசவ வலி
புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகளைப் பெற்று வந்தனர். அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. எனவே காமராஜர் சாலையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றனர்.

சிசேரியன் அறுவை சிகிச்சை
அவர்கள் குழந்தைகளை அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் என்று கூறி இசிஆர் சாலையில் உள்ள வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மருத்துவமனையில் அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது திவ்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரும் அவர் வயிற்றில் இருந்த குழந்தைகளும் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

ஆர்ப்பாட்டம்
ஆனால் தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாகத்தான் அவர்கள் இறந்துவிட்டதாகக் கூறி உறவினர்களும், மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்களும் இன்று அந்த மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது லாஸ்பேட்டை போலீஸார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் போராட்டத்தை கைவிட்டுத் திரும்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications