கருப்பனுக்கு சுருட்டு எடுத்து வை... குடியை தலைமுழுகிடலாம்... கரூரில் விநோத நம்பிக்கை!
கரூர்: குடி அடிமை.. தமிழ்நாட்டில் இன்று பலரும் இப்படிக்கு குடிக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் கரூர் அருகே, சாதாரண சுருட்டை வைத்து குடிபோதையிலிருந்து மீள முடியும் என்று விநோதமாக நேர்த்திக் கடன் செலுத்தி சாமி கும்பிட்டு வருகிறது ஒரு பக்தர் கூட்டம்.
இந்த விநோத வழிபாடு அப்பகுதியில் மிகவும் பிரசித்தமாகும். கருப்பண்ணசாமிக்கு சுருட்டு வைத்து வேண்டிக் கொண்டு சென்றால் குடி போதையிலிருந்து முழுமையாக விடுபடாலம் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
கரூர் வெங்கமேடு ஏ 1 பெட்ரோல் பங்க் எதிரே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசாஞ்சகல் கருப்பண்ண சுவாமி கோயில். சாய்ந்தகல்லில் அமைந்துள்ளதால் இந்த கருப்பண்ண சுவாமிக்கு சாஞ்சக்கல் கருப்பண்ணசுவாமி எனப் பெயர் வந்ததாம்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே அருள்பாலித்து வரும் இந்த சாஞ்சகல் கருப்பண்ண சுவாமியானது பக்தர்கள் கேட்கும் வரத்தை கொடுக்கும் வல்லமை படைத்தவர் என அவரை வணங்கும் பக்தர்கள் கூறுகின்றனர்.
முக்கியமாக குடி போதையை மறக்க சுருட்டு வைத்து வழிபட்டால் குடிபோதையை மறப்பதோடு அந்த குடிமகனின் குடியை காக்கிறா கருப்பண்ணசாமி என்பது ஐதீகம் .இந்த கோவிலின் பூசாரியாக இருப்பவர் நாகூர் பிச்சை (45). மதுரையை சார்ந்த இவர் ஒரு முஸ்லீம் ஆவார். இருந்தாலும் இந்த அருள்மிகு ஸ்ரீ சாஞ்சகல் கருப்பண்ண சுவாமியின் மேல் இருந்த பக்தியால் பூசாரியாகி விட்டார் என பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த சாஞ்சகல் கருப்பண்ண சுவாமி கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அன்னதானத்தோடு சிறப்பு விஷேச வழிபாடு நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுவது வழக்கம். அப்போது முதிர்ந்த அம்மையார் சுசிலா சுருட்டு, தீப்பெட்டி, சூடம் வில்லைகள், தீபத்திற்கான திரி ஆகியவைகளை விற்று வருகிறார். மேலும் அமாவாசை, பொளர்ணமி அன்றும் விஷேச வழிபாடு நடைபெறுவது உண்டு.
இந்த சாமியைப் பற்றி மூதாட்டி சுசிலா கூறும்போது, குடும்பத்தில் உள்ள பில்லி, சூனியம், பேய் ஆகியவைகளை விரட்டுவதோடு, இவரின் பக்தர்களை காப்பாற்றுவதே சாஞ்சகல் கருப்பண்ண சுவாமியின் வேலையாகும். குடிபோதையினால் ஆண்மகன் படுத்தும் பாட்டினால் குடும்பம் படும்பாடு சொல்வதற்கு இல்லை. ஆனால் இந்த குடிபோதையையும் இந்த கருப்பண் விரட்டியடிக்கிறான். அதற்கு பக்தர்களின் காணிக்கைதான் இந்த சுருட்டு. மேலும் பக்தர்கள் கேட்கும் வரத்தை கேட்ட உடனேயே நிறைவேற்றும் அருள் இந்த கருப்பணுக்கு உண்டு என்றார்.
பூசாரி நாகூர் பிச்சை மேலும் கூறுகையில், இந்தக்கோவிலுக்கு கரூர் மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்களின் வேண்டுதலை, குறிப்பாக ஏராளமான ஆண்களை குடிபோதையில் இருந்து விடுதலை பெற்று தந்துள்ளார். தீபாரதனை தட்டில் கிடைக்கும் காசுகளை வைத்து ஒவ்வொரு வெள்ளியும் சிறப்பு அன்னதானத்தை நடத்துகிறோம். இன்றுவரை கருப்பண்சுவாமி என்னையும் என் பக்தர்களையும் காத்து வருகிறார். இந்த சாஞ்சகல் கருப்பண்ண சுவாமியின் முன்புறம் நாயுடன் அமைந்துள்ள குதிரைதான் கருப்பணின் வாகனம் ஆகும். இதில்தான் இரவு அருள்மிகு சாஞ்சகல் கருப்பண்ண சுவாமியானது எல்லை வரை காவலுக்கு செல்லும் என்பது ஐதீகம் என்றார்.
நம்பிக்கைகள் பலவிதம்.. அதில் இது ஒரு விதம்.