பம்பரம், உறியடி, வட்டக்கல், கீரை வடை, திணை அல்வா... தலைநகரில் ஒரு தமிழ்விருந்து!
சென்னை: மறந்து போன தமிழர் விளையாட்டுக்களை குழந்தைகளுக்கு நினைவூட்டும் வகையில் மரபு விளையாட்டுக்கள் சென்னையில் நடைபெற உள்ளன.
கூடவே கீரை வடை, திணை அல்வா, குதிரைவாலிப் பொங்கல், வாழைப்பூ வடை, முடக்கற்றான் தோசை, வெந்தயக்களி என்று பல்வேறு சிறுதானிய உணவுகளும் விற்பனைக்கு வரவிருக்கின்றன.
உலக சித்தர் மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் சென்னையில் ஆகஸ்டு 14, 15ம் தேதிகளில் ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் எம்ஜிஆர்- ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் இரண்டு நாள் மரபுத் திருவிழா நடைபெற உள்ளது.

சித்த மருத்துவமும் தமிழர் மரபும்
பண்டைய தமிழர்களின் சித்த மருத்துவத்தை நவீன ஆய்வுகளின் அடிப்படையில் அறிவியல் படுத்தி உலக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருதற்காக உலக சித்த மருத்துவ அறக்கட்டளை கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.
உலக சித்தர் மரபுத் திருவிழாவில் பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். மருத்துவமும் வாழ்வியலும் என்ற கருத்தாக்கத்தில் இந்த விழா நடத்தப்படுகிறது.

சித்த மருத்துவ முகாம் மூலிகைக் கண்காட்சி, மரபு விளையாட்டுக்கள், கட்டிடக் கலை, சிற்பக்கலை, வீட்டுத் தோட்டம் பயிற்சி, பாரம்பரிய நெல் மற்றும் மரபு விதைகள் கண்காட்சி, தமிழிசைக் கருவிகள், பாரம்பரிய சமையல் பட்டறை, மரச் செக்கு எண்ணெய், நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள், ஓகம்(Yoga), வர்மக்கலை, இயற்கை விவசாயம் என மரபு வாழ்வியல் குறித்த அனைத்தும் ஒரே இடத்தில் காணும் வாய்ப்பை உருவாக்கியுள்ளார்கள்.
உணவு வகைகளா? அடேங்கப்பா!
இரண்டு நாட்களும் காலையும் மாலையும் உளுந்தங்களி வெந்தயக்களி அவுல் கேசரி குதிரைவாலி பொங்கல் வாழைப்பூ வடை கீரை வடை முடக்கற்றான் தோசை கம்பு, சோள தோசை கேழ்வரகு புட்டு கம்பு, கேழ்வரகு கூழ் பச்சை பயறு தோசை சோள பனியாரம் கருப்பு எள்ளு கொழுக்கட்டை கோதுமை ரவை உப்புமா திணை அல்வா விற்பனைக்கு கிடைக்க உள்ளன
மதிய உணவுக்கு சாப்பாடு ஆவாரம்பூ சாம்பார், வேப்பம்பூ ரசம், பிரண்டை துவையல் பூண்டு காராமணி குழம்பு, கடலை மிட்டாய், இஞ்சி மோர், வரகு தயிர்சாதம் சீரகசம்பா வெஜிடபிள் பிரியாணி, சாமை கீரை சாதம், சாமை சாம்பார் சாதம் உண்டு.
மூலிகை உணவகத்தில் மூலிகை சூப் வகைகள் சிறுதானிய இனிப்பு, கார வகைகள் கிடைக்கும்.

தமிழ்ப் பெண்களின் சிலம்பாட்டம்
சென்னை நகர குழந்தைகளுக்கு அறிமுகமே இல்லாமல் இருக்கும் மரபு விளையாட்டுகளை விளையாடி மகிழ வாய்ப்பு உண்டு. பம்பரம், உறியடி, வட்டக்கல், வில்வித்தை என காணாமல் போய் விட்ட மரபு விளையாட்டுக்களை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் பங்கேற்கும் சிலம்பாட்டம் நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. விழாவில் கலந்து கொள்ள நுழைவுக் கட்டணம் இலவசம். மருத்துவத்தையும் வாழ்வியலையும் கருத்தாகக் கொண்ட திருவிழா என்றாலும், மரபு உணவுத் திருவிழாவாகவும் சென்னையில் இரண்டு நாட்கள் களை கட்டப்போகிறது.
-இர தினகர்












Click it and Unblock the Notifications