“கொடநாடு எஸ்டேட் என்னுடையது... பால் காய்ச்சணும்”... உரிமை கொண்டாடிய பெண்ணால் பரபரப்பு
கோவை: தமிழக முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது சென்று ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் தன்னுடையது என பெண் ஒருவர் எஸ்டேட் நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் அமைந்துள்ளது கொடநாடு எஸ்டேட். தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சொந்தமான இந்த எஸ்டேட்டில் அவ்வப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்று ஓய்வு எடுத்துச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று கொடநாடு எஸ்டேட்டின் 4வது கேட் வாசலில் பெண் ஒருவர் அங்கிருந்த காவலாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதாவது, "கொடநாடு எஸ்டேட் எனக்கு சொந்தமானது. அதை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது. இதற்கான பத்திரங்கள் எனது பெயரில்தான் உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை ஆடி மாதம் பிறப்பதால் அதற்கு முன்பாக பால் காய்ச்சி குடியேற வேண்டும்'' என அவர் கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவலாளி, இது தொடர்பாக எஸ்டேட் நிர்வாகிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கோத்தகிரி போலீசாருக்கு இது தொடர்பாக எஸ்டேட் நிர்வாகத்தினர் தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார், இரவு நேரம் என்பதால் அப்பெண்ணை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அப்பெண் கோவை, உடையாம்பாளையத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்பது தெரியவந்தது. மேலும், உமா மகேஸ்வரி மனநிலை பாதிக்கப்பட்டவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications