ஆஷ் துரை படுகொலையை சமூக நீதி நாளாக அனுசரித்த தலித் அமைப்பு
நெல்லை: நெல்லை மாவட்டம் மணியாச்சியில் வைத்து கலெக்டர் ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட்டதன் நினைவு தினத்தை சமூக நீதி நாளாக தலித் அமைப்பு ஒன்று இன்று அனுசரித்தது. ஆஷ் துரை சமாதியில் அந்த அமைப்பினர் உறுதிமொழியும் ஏற்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சியில் நெல்லைக் கலெக்டராக இருந்த ராபர்ட் வில்லியம் ஆஷை, வாஞ்சிநாதன் 1911 ம் ஆண்டு ஜூன் 17 ல் காலை 10.30 மணிக்கு, நெல்லை மாவட்டம் மணியாச்சியில் சுட்டுக் கொன்றார். கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷ்க்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள். இதில் ஒரு மகன் இரண்டாம் உலகப்போரில் மரணமடைந்தார். இரண்டு மகள்களும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒரு மகன் அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரம் அருகே இக்ளோ என்ற ஊரில் குடும்பத்துடன் வசித்தார். அவரது மகன் அதாவது ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ். அயர்லாந்தில் வக்கீலாக பணியாற்றுகிறார்.
இந்த நிலையில் ஆஷ் துரையின் நினைவு நாளான இன்று அவரது சமாதியில் ஆதித் தமிழர் கட்சி சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆஷ் துரை கலெக்டராக இருந்தபோது, தலித்துகளுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக செயல்பட்டார். தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார். இதனால்தான் வாஞ்சிநாதனால் அவர் சுடப்பட்டார் என்று அந்த அமைப்பின் தலைவர் கு.கி. கலைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications