30% மக்களுக்கு மதுவிலக்கு வேண்டாமாம்.. 'குடிமக்கள்' ஓட்டு யாருக்கு? நியூஸ்-7 கருத்து கணிப்பு
சென்னை: மது விலக்கு வேண்டாம் என்பதுதான் 30 சதவீத மக்களின் கருத்தாக உள்ளது என்று நியூஸ்-7, தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
நியூஸ்7 சேனல் மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு கடந்த சில நாட்களாக தொகுதிவாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
இதில் வெற்றி, தோல்வி என்பதை தாண்டி, வாக்காளர்கள் மனநிலையை பாதிக்க கூடிய அம்சங்கள் பற்றியும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் முக்கியமானதுதான், மது விலக்கு பற்றிய கருத்து கணிப்பு.
மதுவிலக்கு
அதுவரை பாமகவால் முழு வீச்சில் முன்வைக்கப்பட்டு வந்த மது விலக்கு என்பது, போராளி சசிபெருமாள் உயிரிழந்ததை தொடர்ந்து அனைத்து கட்சிகளின் ஆயுதமாகவும் மாறியது. ஆளும் கட்சியை தவிர அனைத்து கட்சிகளுமே மது விலக்கு வேண்டும் என்று கோஷம் முன்வைத்தன.
படிப்படியாக
இந்நிலையில், ஆளும் கட்சியும் இறங்கி வந்து மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. ஜெயலலிதா தனது பிரசாரத்தின்போது இதை அடிக்கடி கூறிவருகிறார்.
ஒரேயடியான விலக்கு
திமுக, உள்ளிட்ட பிற கட்சிகள், முழு மதுவிலக்கை கொண்டுவருவோம் என்று பரப்புரை செய்துவருகிறார்கள். தேர்தல் அறிக்கையிலும், இதுகுறித்து கூறியுள்ளனர்.
வேண்டவே வேண்டாம்
இந்நிலையில் நியூஸ் 7 கருத்து கணிப்பில், மதுவிலக்கு வேண்டும் என்பதற்கு 69.3 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மதுவிலக்கு வேண்டாம் என்று 30.7 சதவீதம் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காரணங்கள்
இந்த 30 சதவீத மக்களும், மது விலக்கு அமலுக்கு வந்தால் கள்ளச்சாராயம், பாக்கெட் சாராயம் போன்ற உயிரை உடனே பறிக்கும் மதுக்கள் நடைமுறைக்கு வந்துவிடும் என்ற அச்சத்தால் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று தெரிகிறது. இவர்களில் பலரும் மது பழக்கம் உள்ளவர்களாகவும் இருக்கலாம்.
ஓட்டு யாருக்கு
30 சதவீத மக்கள் மது விலக்கு வேண்டாம் என்று கூறும் நிலையில், அவர்கள் அதிமுகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டைத்தான் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அக்கட்சிதான், படிப்படியாக மது விலக்கு கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளது. எனவே, அதிமுக ஆட்சிக்கு வந்தால், மது விலக்கு உடனே அமலுக்கு வராது என்ற நம்பிக்கை குடிமக்கள் மத்தியில் நிலவுகிறது.
கூட்டணி ஆட்சி சூப்பர்
இதேபோல, கூட்டணி ஆட்சிதான் வேண்டும் என்று, 36.5 சதவீதம் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 63.5 சதவீதம் மக்கள் வழக்கம்போல தனிக்கட்சி ஆட்சி வேண்டும் என்று கூறியுள்ளனர். கூட்டணி ஆட்சி பக்கம் மக்கள் மனநிலை மாறத்தொடங்கியுள்ளதும், இக்கருத்து கணிப்பில் உறுதியாகியுள்ளது.