எரித்துக் கொல்லப்பட்ட ஓசூர் சர்வேயர்... தேடப்படும் நபர் ‘சரண்’ அடைவதாக வாட்ஸ் அப்பில் தகவல்
ஓசூர்: ஓசூர் சர்வேயர் கொலையில் தேடப்பட்டு வரும் இக்ரமுல்லா என்பவர், தான் விரைவில் போலீசில் சரணடைய இருப்பதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது ராமமூர்த்தி நகர். இதன் அருகே உள்ள இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த நில அளவையர் குவளை செழியன் என்பவர், மர்ம கும்பலால் கடத்தி வரப்பட்டு கடந்த மாதம் 28ம் தேதி கொலை செய்யப்பட்டார். காரோடு எரிந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
முன்னதாக இது சம்பந்தமாக ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் குவளைசெழியனின் மனைவி ரேவதி புகார் அளித்திருந்தார். அதில், தனது கணவரை மர்ம நபர்கள் சிலர் கடத்தி, பணம் கேட்டு மிரட்டுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
எனவே, இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. நாகராஜ், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் ஆகியோரின் உத்தரவின் பேரில் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் அழகு தலைமையில் இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இதற்கிடையே, குவளை செழியனின் உடல் மீட்கப்பட்ட போது, அங்கு தீக்காயங்களுடன் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளபட்டி சக்தி விநாயகர் தெருவைச் சேர்ந்த சக்திவேல் (36) என்பவரை போலீசார் கைது செய்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குவளைசெழியனின் கள்ளக்காதலியான ஓசூரை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மனைவி கார்த்திகேயனி (38) மற்றும் கூலிப்படையாக செயல்பட்ட சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னவர் (21), முருகன் (23), பிரபு (26), சித்துராஜ் (21), முத்து (26), ஓமலூர் காமலாபுரம் ஏர்போர்ட் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜா (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கலைவாணன் மற்றும் இக்ரமுல்லா ஆகியோரை பிடிக்க தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேடப்பட்டு வரும் இக்ரமுல்லா பேசியதாக வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்று உலா வருகிறது. அதில் அவர், ‘தான் விரைவில் சரண் அடைய உள்ளதாகவும், அதற்கு முன்னர் இந்த கொடூர கொலையில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை தெரிவிப்பதாகவும்' தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான வாட்ஸ் அப் ஆடியோவில் அவர் பேசியிருப்பதாவது, "ஓசூர் குவளைச் செழியன் கொடூர படுகொலையில் தேடப்படும் குற்றவாளியாக என்னை சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் என்ன குற்றம் செய்தேன் என்பதையும், இந்த கொலைக்கு காரணமானவர்கள், யாருக்காக இந்த கொலை செய்யப்பட்டது என்ற உண்மையையும் நான் மக்களுக்கு தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.
நான் இந்த தகவலை அறிவித்த அடுத்த வினாடியே காவல் துறையினரிடம் சரண்டராகி நான் செய்த தவறுக்கு என்ன நிலையோ அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். நிச்சயமாக இந்த கொலையில் எந்தவித பங்கும் எனக்கு இல்லை. இந்த கொலைக்கு காரணமானவர்கள் யார்.
இந்த கொலையை செய்ய தூண்டியவர்கள் யார் என்ற உண்மையை பயங்கர சம்பவங்களை கடந்த 4 மாத காலமாக என்ன நடந்ததோ அதனை சொல்ல நான் தொலைக்காட்சி வாயிலாக முதல் அமைச்சர் அவர்களுக்கும், உயர்நீதிமன்ற அரசர்களுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். நிச்சயமாக நான் சொல்வதில் எந்தவிதமான பொய்யும் இல்லை. அனைத்தும் உண்மையே. நான் கூடிய விரைவில் தொலைக்காட்சி வாயிலாக இந்த தகவலை தெரிவிக்க விரும்புகின்றேன். நன்றி வணக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.
இக்ரமுல்லாவின் இந்த ஆடியோ பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.