நெல்லை அருகே தனியார் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு.. பேருந்து சூறை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு
நெல்லை அருகே தனியார் பேருந்து மோதி பெண் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பேருந்தை சூறையாடினர்.
நெல்லை: நெல்லை அருகே தனியார் பேருந்து மோதி பெண் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பேருந்தை சூறையாடினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த முருகையா. இவரது மனைவி கமலம் கோவில்பட்டி செல்வதற்காக செங்கோட்டை-பண்பொழி சாலையை கடந்துள்ளார்.
அப்போது செங்கோட்டையிலிருந்து கோவில்பட்டி செல்லும் தனியார் பேருந்து வேகமாக வந்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக பேருந்து கமலம் மீது மோதியது. இதில் கமலம் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் திரண்டுவந்து ஆத்திரத்தில் பேருந்தின் முன்பகுதி சைடு ஆகிய கண்ணாடிகளை நொறுக்கி சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
தொடர்ந்து சாலையில் கமலத்தின் உடலோடு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்தவழியே போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.