முன்னதாக சொல்லியிருந்தா ஆர்கே.நகரில் நானும் வேட்புமனு தாக்கல் போட்டிருப்பேனே.. சந்தானம் 'லொள்ளு’
முன்னதாகவே ஐடியா கொடுத்து இருந்தால் நானும் வேட்புமனு தாக்கல் செய்திருப்பேன் என்று சந்தானம் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
சென்னை : முன்னதாகவே யாராவது ஐடியா கொடுத்து இருந்தால் நானும் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்து இருப்பேன் என்று நடிகர் சந்தானம் தெரிவித்து உள்ளார்.
நடிகர் சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதில் மீண்டும் முழுநீள ஆக்ஷன் ஹீரோவாக நடித்து இருக்கிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம்.
இந்தத் திரைப்படம் குறித்தான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது, சந்தானம், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் வி.டி.வி கணேஷ், ரோபோ சங்கர் ஆகியோர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.
அப்போது, பத்திரிகையாளர் ஒருவர், சமீபத்தில் நடிகர் சந்தானத்திற்கும், தயாரிப்பாளர் ஒருவருக்கும் இடையே நடந்த மோதலில், பா.ம.க கட்சியினர் வெளிப்படையாகவே சந்தானத்திற்கு ஆதரவு தெரிவித்தது குறித்தும், அரசியலில் ஈடுபட எண்ணம் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சிரித்துக்கொண்டே அந்த பத்திரிகையாளருக்கு பதிலளித்த சந்தானம், நீங்கள் என்னை ஒரு நாள் முன்னதாக சந்தித்து இந்த ஐடியாவை எனக்கு கொடுத்து இருந்தால் நானும் மனுத்தாக்கல் செய்து இருப்பேன். இப்போது மனுத்தாக்கல் தேதி முடிந்துவிட்டதால், வேண்டுமென்றால் அடுத்த முறை பார்ப்போம் என்று நக்கலாக பதிலளித்தார்.
தொடர்ந்து அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, தற்போது நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உருவெடுத்து உள்ளேன். அதில் தான் எனக்கு முழு கவனமும் இருக்கிறது. இருந்தாலும் உங்கள் கேள்விக்கு ஒரு நல்ல பதிலை நான் விரைவில் தெரிவிப்பேன் என்று ரஜினி பாணியில் பேசி உள்ளார் நடிகர் சந்தானம்.