நடிகர் வடிவேலு மீது அவதூறு வழக்கு - நவம்பர் 20ம் தேதியன்று நாமக்கல் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
நாமக்கல்: மதுரையில் நடிகர் சங்கம் தொடர்பாக அவதூறாக பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் நடிகர் வடிவேலு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தல் களத்தில் இருக்கும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணிக்கு வடிவேலு ஆதரவு கோரி வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் மதுரையில் உள்ள நாடக நடிகர்களை சந்தித்து பாண்டவர் அணிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த வடிவேலு நடிகர் சங்க தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு தனது பாணியில், "வெறும் கேட் மட்டும் தான் இருக்கு. நடிகர் சங்கத்தை காணவில்லை. காணாமல் போன, களவு போன நடிகர் சங்கத்தை கண்டுபிடிக்கத் தான் விஷால் அணியில் சேர்ந்துள்ளேன்" என பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்ட நாடக நடிகர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் என்பவர் வடிவேலுவின் பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி மோகனாம்பாள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.