காவேரிக்கு விரைந்த நடிகர் விவேக்.. கருணாநிதி நலம் குறித்து கேட்டறிந்தார்
கருணாநிதி மீண்டும் தமிழுக்கு தொண்டு ஆற்றுவார் என விவேக் தெரிவித்துள்ளார்.
சென்னை: தீவிர சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் விவேக் இன்று மருத்துவமனை சென்று விவரம் கேட்டறிந்தார்.
நடிகர் விவேக், திரைப்பட நடிகராக மட்டுமின்றி தன் சமூக அக்கறையினை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருபவர். அது, "காவிரி தாயே என்னை மன்னிப்பாயா" என்று விவசாயிகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் வார்த்தைகளில் ஆகட்டும், பிராண வாயு தந்து வாழ்நாள் முழுவதும் நம்மை காப்பாற்றும் மரங்களை வளர்ப்போம் என்று கூறி மரக்கன்றுகளை ஓயாமல் நட்டு வருவதிலாகட்டும் அது தென்பட்டு போகிறது.

அதேபோல திமுக தலைவர் மீது அவருக்கு அபரிமிதமான மரியாதையும், உயரிய மதிப்பும் வைத்திருப்பவர் விவேக். அது பல கலைத்துறை நிகழ்ச்சியிலே அதனை விவேக் வெளிப்படுத்தி இருப்பார். அதேபோல கருணாநிதிக்கும் விவேக் மீது தனி பாசம் உண்டு. விவேக்கின் மகன் பிரசன்னகுமார் திடீரென்று மறைந்தபோதுகூட, கருணாநிதி இரங்கல் கடிதம் எழுதி தனது வருத்தத்தை தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கூட, நடிகர் விவேக், "தீயைத் தாண்டியவர், தென்றலைத் தீண்டியவர் விரைவில் நலம் பெற வேண்டும்" என டுவிட்டரில் தனது வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு நடிகர் விவேக் சென்றார். அப்போது கருணாநிதியின் உடல்நலம் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். வெளியில் வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்பி, தமிழுக்கு தொண்டு ஆற்றுவார் என கூறினார்.












Click it and Unblock the Notifications