ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது.. தமிழ் அமைப்பு எதிர்ப்பு.. ரஜினி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்பு ஒன்று ரஜினி வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் ரஜினிகாந்த் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது
சென்னை; கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
5 நாட்கள் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வந்த அவர், கடைசி நாளில் உரையில், அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்திற்கு சில தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பு இன்று போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்தது. இதனால் ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீசார் கூடுதல் பாதுகாப்பை அளித்துள்ளனர்.
ரஜினிகாந்த்தின் வீட்டின் அருகே கூடுதலாக போலீசார் போடப்பட்டுள்ளதால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.