சென்னையில் ஜெ.: கொட்டும் மழையில் பூமழை தூவி மனித சங்கிலியாக நின்று வரவேற்ற அதிமுக தொண்டர்கள்!!
சென்னை: பெங்களூர் சிறையில் இருந்து சென்னைக்கு வந்த ஜெயலலிதாவை கொட்டும் மழை என்றும் பாராமல் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து போயஸ்கார்டன் இல்லம் வரை பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நின்று எழுச்சி மிக்க வரவேற்பு கொடுத்தனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ராஹார சிறையில் இருந்து இன்று விடுதலை ஆனார். சிறை வாசலில் இருந்து பெங்களூர் விமான நிலையம் வரை வழிநெடுக அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.

சென்னையில் வரவேற்பு
தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து இறங்கியதும் ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். புரட்சித்தலைவி அம்மா வாழ்க என்று முழக்கமிட்டனர். அமைச்சர் டி.எம்.கே.சின்னையா, பண்ருட்டி ராமச்சந்திரன், நடிகர் ராமராஜன், உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விமான நிலையத்தில் திரண்டு வரவேற்பு கொடுத்தனர்.
கட்டுக்கடங்காத கூட்டம்
பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் வந்து குவிந்ததால் கட்டுக் கடங்காத கூட்டம் காணப்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
மனிதசங்கிலி
சென்னை விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டன் வரை வழிநெடுக தொண்டர்களும், மகளிரணியினரும், மனிதசங்கிலி போல் ரோட்டில் நின்று உணர்ச்சி மிக்க வரவேற்பு கொடுத்தனர். அவர்களுக்கு இரட்டை விரல் காட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார் ஜெயலலிதா.
தொண்டர்கள் உற்சாகம்
கொட்டும் மழை என்றும் பாராமல் போயஸ்கார்டன் அருகே காலை முதலே திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் பூக்களை தூவி வரவேற்பு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications