முதல்வர் ஓபிஎஸ் கையை வெட்டுவேன்- அதிமுக மா.செ கலைராஜன் பகிரங்க கொலை மிரட்டல்!
சென்னை: அதிமுகவை கைப்பற்ற நினைத்தால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கையை வெட்டுவேன் என அக்கட்சியின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா தலைமையில் இரண்டாக பிளவுபட்டுள்ளது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை தாம் திரும்பப் பெற விரும்புவதாகவும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன் எனவும் ஆளுநர் வித்யாசகர் ராவிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் வலியுறுத்தினார்.
அதேபோல் சசிகலாவும் தமக்கே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது; ஆகையால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என சசிகலாவும் ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்து உரிமை கோரினார். இதையடுத்து தமிழக சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் ஆளுநர் வித்யாசகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் அதிமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன், கட்சியை கைப்பற்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முயற்சித்தால் அவரது கையை வெட்டுவேன் என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கலைராஜனின் இந்த கொலை மிரட்டல் அதிமுக தொண்டர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.