சிவகங்கை: அதிமுக பிரமுகரின் தம்பி உட்பட 2பேர் வெட்டி கொலை
சிவகங்கை: தேர்தல் முன்விரோதத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் தம்பி உள்பட 2 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றிய அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளராக இருப்பவர் பாலாஜி. இவர் நாட்டரசன்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் உள்ளார்.
இவரது தம்பி வெங்கடேசுவரன் (வயது28), தாய்மாமா இளையராஜா (26). நேற்று இரவு இவர்கள் இருவரும் சிவகங்கை அல்லூர் அருகே பனங்காடியில் உள்ள தங்களது வயலுக்கு காவல் பணிக்கு சென்றனர். இன்று (வியாழக்கிழமை) காலை அவர்கள் வீடு திரும்பாததால் செல்போனில் பாலாஜி தொடர்பு கொண்டு உள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாக மணி அடித்தும் அவர்கள் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாலாஜி, வயலுக்கு நேரில் சென்றார். அப்போது அங்கு அவரை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில், வெங்கடேசுவரனும், இளையராஜாவும் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். பம்ப் செட் அடியில் படுத்திருந்த அவர்கள் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குக் சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார்.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த கொலை தொடர்பாக சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தேர்தல் முன்விரோதத்தில் கொலை சம்பவம் நடை பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அதிமுக பிரமுகரின் தம்பி உள்ளிட்ட இருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சிவகங்கை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.