ஆட்டோவுக்கு போலீஸ் தீ வைத்தது, குடத்தை உடைத்ததற்கு 'நமது எம்ஜிஆர்' கண்டுபிடித்த அடடே காரணம்!
சென்னையில் போலீசார் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையை நியாயப்படுத்தியுள்ளது அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது எம்ஜிஆர். போலீசார் வேடமிட்ட நபர்தான் ஆட்டோவுக்கு தீ வைத்ததாகவும் நமது எம்ஜிஆர் ஏடு தெரிவித்
சென்னை: சென்னையில் போலீஸ் வேடமிட்ட நபர்கள்தான் ஆட்டோவுக்கு தீவைத்ததாகவும், போலீசார் மீது மிளகாப் பொடியை தண்ணீரில் கரைத்து வீசுவதற்காக "பெண் தாதா" வைத்திருந்த குடத்தையே பிடுங்கி போலீசார் உடைத்ததாகவும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேடு எழுதியுள்ளது.
நமது எம்ஜிஆர் நாளேட்டில் சித்ரகுப்தன் என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள கட்டுரை:
ஒரு போராட்டக் களத்தை போர்க்களமாக்கிட பொல்லாங்கு கும்பல் போட்ட சதித் திட்டம் பொடிப் பொடியாகிவிட்டது!

ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டு, தமிழினத்தின் மீதான கலாச்சாரத் தாக்குதலைத் தொடுத்தது தி.மு.க.-காங்கிரஸ் தலைமை தாங்கி நடத்திய ஸ்பெக்ட்ரம் திருட்டுக் கூட்டணி ஆட்சி என்றிருக்க,
அவர்களை எதிர்த்து கோஷம் போடாமல், பிரதமர் மோடிக்கு எதிராக ஆபாசக் கூச்சலிட ஆட்களை ஏற்பாடு செய்து,
தமிழக முதலமைச்சருக்கு எதிராக தரந்தாழ்ந்து கோஷமிடவைத்து,
கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மாவுக்கு எதிராக கண்ணியமற்ற கூச்சல்களை எழுப்ப சில கழிசடைகளை ஏற்பாடு செய்து...
இதன்மூலம் ஒரு சிறு தீப்பொறி கிளம்பினால்கூட, அதன்மூலம் ஒரு மோதலுக்கு வித்திட்டு அதை வைத்தே ஜல்லிக்கட்டு உரிமைப் போராட்டத்தை சரித்திரம் காணாத கலவரமாக உருமாற்றிவிடலாம் என்று கணக்குப் போட்டு காத்துக் கிடந்த சதிகாரக் கும்பலின் அதிகார வெறி ஆறு நாட்கள் கடந்தும் நிறைவேறாது போகவே...
ஏழாம் நாளில், அதுவும் அவசரச் சட்டம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறி, ஜல்லிக்கட்டு தடை முற்றிலுமாக நீக்கப்பட்டு, இதன்மூலம் காவேரி, முல்லைப்பெரியாறு, இந்த வரிசையில் ஜல்லிக்கட்டு உரிமையையும் எங்கள் காவியத் தாயின் பாதத் தடத்தை வேதமெனக் கருதி நடக்கும் கழக அரசே மீட்டது என்ற வரலாற்றுப் பெருமை வடிவம் பெற்ற வேளையில்,
காவல்துறையின் மீது தாக்குதல் நடத்தி, ஒரே ஒரு காவலரையாவது பலியாக்கிவிட்டால் தங்கள் தி.மு.க. ஆட்சியில் கோவையிலே நடந்த சரித்திரம் காணாத தொடர் குண்டு வெடிப்பு போல ஒரு கலவரம் பற்றிக் கொண்டுவிடும் என்று திட்டமிட்ட தீயசக்திகள் வைத்த தீயில்தான் ஐஸ்அவுஸ் காவல் நிலையம் எரிக்கப்பட்டது.
காவலர்களை, குறிப்பாக காவல் வாகனங்களை மட்டுமே குறிவைத்து களமிறக்கப்பட்ட ரவுடிகள் கல்வீச்சு நடத்தினர். பெட்ரோல் குண்டுகளை வீசினர். வாகனங்களை எரித்தனர்.
மிளகாய்ப் பொடியை குடத்தில் கரைத்து காவல்துறை மீது தெளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட பெண் தாதா ஒருவரிடமிருந்து குடத்தை பிடுங்கி எறிந்த காட்சியையும்,
காவலர் வேடம் தரித்த ஒருவர் ஆட்டோவுக்கு தீ வைப்பது போன்ற ஒரு வீடியோ பதிவையும் கருணாநிதி குடும்ப தொலைக்காட்சிகள் திருப்பி திருப்பி ஒளிபரப்புச் செய்து
பொதுமக்களை காவலர்களுக்கு எதிராகத் தூண்டிட பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டது.
ஆனால், அறிவார்ந்த தமிழக மக்கள் இதனை வேறு எந்தத் தொலைக்காட்சியும் ஒளிபரப்புச் செய்யாத நிலையில்,
கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சியே இத்தகைய காட்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டவர்களாக பொறுமை காத்தனர்.
அதுமட்டுமல்லாமல், ஆறு நாட்கள் மாணவர்களின் அகிம்சை வழிப் போராட்டங்களுக்கு பாதுகாப்பாக நின்ற காவல்துறை, காக்கி உடுப்பையே மறந்துவிட்டு, போராட்டத்திலேயே பங்கேற்று, பணி இடைநீக்கத்துக்கே ஆளாகிற அளவுக்கு தமிழினத்தின் உணர்வுக்கு மதிப்பளித்து உரிமைப் போராட்டத்திற்கு பக்கத் துணையாக நின்றார்கள் என்பதை எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து, இன்று போராட்டம் வெற்றிபெற்ற நிலையில்,
கலவரம் செய்ய வேண்டிய அவசியம் தமிழக காவல்துறைக்கு இல்லை என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டதால்,
தீயசக்திகள் இட்ட தூபத்திற்கு பலனின்றிப்போனது!
இதையடுத்து, காவல்துறை கலவரக்காரர்களை அடக்கி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து, சட்டம்&-ஒழுங்கை நிலைநிறுத்திவிடவே,
உயிர்ப் பலிகள் இல்லாமல், துப்பாக்கிச் சூடு மரணங்கள் இல்லாமல், ஒரே நாளில் இயல்பு நிலை மீட்டெடுக்கப்பட, காவல் துறைக்கு எதிராகவும், அதன்மூலம் கழக அரசுக்கு எதிராகவும் திரைமறைவு திட்டமிட்ட தீயசக்திகளின் சூழ்ச்சி தலைகுனிந்து, தவிடுபொடியானது.
"பற்றி எரிகிறது சென்னை...",
"தமிழகமே கலவரக் காடானது..."
"வடபழனி எரிகிறது..."
என்றெல்லாம் அவதூறு பரப்புவதையே பொழுதெல்லாம் புரிந்த கருணாநிதியின் விஷமத் தொலைக்காட்சிகளும் உண்மையற்ற புரளிகளை ஊதிப் பெரிதாக்க முனைந்த அவர்களது ஊடகங்களும் மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்ட வேளையில்,
இப்போது அவர்கள் ஒளி பரப்பிய வீடியோ பதிவுகளை வைத்தே விஷமிகள் பட்டியலையும், மாணவர்கள் போர்வையில் கலவரம் செய்த குண்டர்களின் அடையாளங்களையும் காவல்துறை திரட்ட தொடங்கி விட்டது.
இதன்மூலம் அவர்கள் பறித்த குழியில் இப்போது அவர்களே விழும் அவமானம் காத்திருக்கிறது.
அதேவேளையில், ஜல்லிக்கட்டு உரிமையை சாதுர்யமாய் வென்றெடுத்த சாதனையாலும், சட்டம்&ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவல்துறையை மிகச் சரியாக கையாண்ட நிர்வாகப் பெருமையாலும் கழக அரசை உலகெங்கும் வாழும் தமிழினமோ உளமாரப் பாராட்டித்தான் வாழ்த்துகிறது.
இவ்வாறு டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேட்டில் எழுதப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications