மகளுக்குக் கொடுத்த இடத்தை அபகரித்து விட்டார் தேமுதிக எம்.எல்.ஏ... போலீஸில் அதிமுக பெண் புகார்!
சென்னை: எனது மகளுக்கு கிரயம் செய்து கொடுத்த இடத்தை தனது இடம் என்று கூறி அபகரித்து விட்டார் தேமுதிகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அனகாபுத்தூர் முருகேசன் என்று கூறி சென்னை போலீஸில் புகார் கொடுத்துள்ளார் பாத்திமா என்ற 55 வயது மூதாட்டி.
சென்னை புறநகரான, அனகாபுத்தூர் காயிதே மில்லத் நகரில் வசித்து வருபவர் பாத்திமா (55). அதிமுகவைச் சேர்ந்த இவர் தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், நான் 40 வருடமாக மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். என் வீட்டிற்கு முன்பு 530 சதுரடி எனக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அந்த இடத்தை 9-4-2012 அன்று என் மகளுக்கு கிரயம் செய்து கொடுத்தேன்.
அந்த இடத்தை தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அனகை முருகேசன் சொந்தம் கொண்டாடி வருகிறார். இது தொடர்பாக ஆலந்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு வாங்கி இருக்கிறேன். இந்த நிலையில் கடந்த 22-11-2014 அன்று இரவு 9 மணியளவில் அனகை முருகேசன் அவரது ஆட்களுடன் வந்து இடத்தை காலி செய்து கொடுக்காவிட்டால் எனது குடும்பத்தை எரித்து கொன்று விடுவதாக மிரட்டினார். இதுபற்றி சங்கர்நகர் போலீசில் புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே எனக்கு பாதுகாப்பு அளிப்பதோடு கொலை மிரட்டல் விடுத்த அனகை முருகேசன் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாத்திமா.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications