எகிறிய "எக்" ரேட்..ஹோட்டல்களில் உயர்ந்த ஆம்லெட் விலை..
சென்னை : முட்டை விலை உயர்வால், ஹோட்டல்களில் ஆம்லெட் விலை அதிரடியாக உயர்ந்து பேச்சிலர்கள் உள்பட அனைவரின் நாக்கையும் கட்டிப்போட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை ஒரு முட்டை விலை ரூ.4 முதல் ரூ.4.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் முட்டை வியாபாரிகள் தெரிவித்து இருந்தனர்.

கடந்த வாரத்தில் ஒரு டஜன் முட்டை (12 முட்டைகள்) ரூ.48-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது விலை உயர்ந்ததைத் தொடர்ந்து சில்லறை கடைகளில் ஒரு டஜன் முட்டை ரூ.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் ஆம்லெட் விலையும் அதிகரித்துள்ளது.
சென்னையை சுற்றியுள்ள ஓட்டல்களில் சாதாரண நாட்களில் ஒரு ஆம்லெட் விலை ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. முட்டை விலை அதிகரித்த பிறகு, தற்போது ஒரு ஆம்லெட் விலை ரூ.15-க்கும், டபுள் ஆம்லெட் ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சில இடங்களில் கடைகளுக்கு ஏற்றாற்போல் ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆம்லெட் விலை மட்டும் அல்லாது, முட்டை சேர்க்கப்படும் உணவு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
கொத்து புரோட்டா, வீச்சு புரோட்டா, ‘பிரெட்' ஆம்லெட் போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
ஏற்கனவே "சரக்கு" விலை உயர்வால் ஊற்றாமலேயே தலை சுற்றி வரும் குடிமகன்கள், பார்களிலும் முட்டை உணவுகள் விலை மேலும் உயர்ந்ததால் குறைந்தபட்ச சைட் டிஷ்ஷுக்கும் தடா போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications