சங்கு அபிஷேகம், கோமாதா பூஜை அதிமுகவினரின் தொடர் பிராத்தனைகள்
நெல்லை/ கோவை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி நெல்லையில் அதிமுகவினர் கோமாதா பூஜை செய்தனர். கோவையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 27ஆம் தேதி முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
ஜெயலலிதாவுக்கு விடுதலை கிடைக்க வேண்டி கடந்த மாதம் 27ஆம்தேதி முதல் மாநிலங்களில் உள்ள சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் சிறப்பு பூஜைகளையும்,யாகங்களையும் நடத்தினர்.ஆனால் அது பலனளிக்கவில்லை.

ஜாமீன் மனு தள்ளுபடி
உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்க வேண்டி நாள் தோறும் அதிமுகவினர் முடிகாணிக்கை,மண்சோறு சாப்பிட்டனர். அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை அங்கப் பிரதட்சணம் செய்தனர். சிறப்பு யாகங்கள் நடத்தியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கவில்லை.மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மனம் தளராத அதிமுகவினர்
ஆனாலும் மனம் தளராத அதிமுகவினர் சங்கு அபிசேகம்,நெய் விளக்கேற்றுதல் என நாள்தோறும் புதுப் புது விதமான வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

1008 சங்கு அபிஷேகம்
கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற யாக வழிபாட்டிலும்,1008 சிறப்பு சங்கு வழிபாட்டிலும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

உச்சநீதிமன்றத்தில் ஜாமீன்
சங்கு அபிஷேகம் மிகவும் சக்தி வாய்ந்தது சிவனுக்கு மிகவும் பிடித்தது என்பதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்க வேண்டும் என்று தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

கோமாதா பூஜை
நெல்லை மாவட்ட அதிமுகவினர் நேற்று மாலை கோமாதவுக்கு சிறப்பு பூஜைகளை நடத்தி மலர்களை தூவி வழிப்பட்டனர். இதுமட்டுமல்லாது இதேபோல அம்மாவிற்கு ஜாமீன் கிடைக்க வேண்டி பல்வேறு கோவில்களிலும் பிராத்தனைகளை மனம் தளராமல் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications