திண்டுக்கல் அருகே நிலத்தகராறில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நிலத்தகராறு காரணமாக அதிமுக பிரமுகர் உள்ளிட்ட இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லை அடுத்த சின்னாளபட்டி பூஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் குண்டுமணி என்ற சந்திரன்(52). இவர் சின்னாளபட்டி பேரூர் அ.தி.மு.க. 5-வது வார்டு பிரமுகராக இருந்துவந்தார். இவருக்கு இந்திரா, மேரி என்ற 2 மனைவிகள் உள்ளனர். இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
விவசாயியான சந்திரனுக்கு சின்னாளப்பட்டி அருகே உள்ள சிக்கனம்பட்டி என்ற பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. இன்று காலை சந்திரன் தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது அவருடன் தோட்ட காவலாளியான செம்பட்டியை அடுத்த சீவல்சரகு பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரும் தோட்டத்தை சுற்றி பார்த்து கொண்டிருந்தனர்.
திடீரென தோட்ட பகுதிக்கு ஒரு ஆட்டோ வேகமாக வந்து நின்றது. அப்போது அதில் இருந்து அரிவாள்களுடன் இறங்கிய கும்பல் சந்திரனுடன் வாக்குவாதம் செய்தனர்.
வாக்குவாதம் முற்றவே அந்த கும்பல் சந்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க வந்த தோட்ட காவலாளி பாண்டியையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்று விட்டது.
அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. சந்திரனின் உறவினர்கள் அங்கு ஏராளமானோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சின்னாளப்பட்டி போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், சந்திரனுக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை சந்திரன் வெட்டி கொலை செய்யப்பட்டதும், தடுக்க வந்த காவலாளி பாண்டி கொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் திண்டுக்கல் சின்னாளப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications