அதிமுக மிசன் 234- அடுத்த அட்டாக் தயார்: தழைக்கட்டும் தமிழகம்... செழிக்கட்டும் தமிழர்கள்...
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் படு சுறுசுறுப்பாக தயாராகி வருகின்றனர். திமுக, பாமக, மதிமுக தலைமையிலான மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக என அனைவரும் ஆளுங்கட்சியை பல வகைகளில் அட்டாக் செய்யவே, விடுமா அதிமுக, தன் பங்குக்கு போஸ்டர் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது.
விஜயதசமியன்று ஒளிரும் நிகழ்காலம்... மிளிரும் எதிர்காலம் என்று தொடங்கி வைத்தார் ஜெயலலிதா. இப்போதோ தழைக்கட்டும் தமிழகம்... செழிக்கட்டும் தமிழர்கள் என்று அடுத்த போஸ்டரை களமிறக்கியுள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இந்த போஸ்டர்கள்தான் ஜொலி ஜொலிக்கின்றன.

மாற்றம்... முன்னேற்றம்
பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணியோ... ஒபாமா வாசகங்களை காப்பி அடித்து மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று ஆரம்பித்தார். அதை சமூக வலைத்தளங்களில் கிண்டல் அடிக்காத ஆட்களே இல்லை.

முடியட்டும் விடியட்டும்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினோ நமக்கு நாமே பயணத்தை தொடங்கி 'முடியட்டும்... விடியட்டும்' என்ற முழகத்துடன் சுற்றி வருகிறார். அவரது செயல்பாடுகளையும் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் கேலி செய்து வருகின்றனர். இவருக்கு ஓட்டு போட்டால் நமக்கு நாமமே மிஞ்சும் என்பது மக்களின் கமெண்ட்.

மக்கள் நலக்கூட்டணி
வைகோ தலைமையிலான மக்கள் நலக்கூட்டணியோ ஆக்டிவ் ஆக போராட்டம்... அறிக்கை என ஊடகங்களில் தலையை காட்டி வருகிறது. இந்த கூட்டணிக்கு வலிமை சேர்க்க தேமுதிக, தமாக வருமா என்பதே இப்போதைய கேள்வி.

அதிமுகவின் திட்டம் என்ன?
எதிர்கட்சியினர் அடிக்கும் போஸ்டர்கள்... பிரச்சார யுக்திகளை அமைதியாக கொடநாட்டில் இருந்து கவனித்து வரும் முதல்வர் ஜெயலலிதாவோ விஜயதசமியன்று தனது பணியை தொடங்கிவிட்டது. 'ஒளிரும் நிகழ்காலம் மிளிரும் எதிர்காலம்' என்று கன கட்சிதமாக தொடங்கிவிட்டது.

மிசன் 234 அட்டாக்
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று முழு மூச்சோடு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. 'தழைக்கட்டும் தமிழகம் செழிக்கட்டும் தமிழர்கள்' என்று அடுத்த போஸ்டர் போட்டுள்ளார்கள்.
|
ஜொலிக்கும் போஸ்டர்கள்
இந்த போஸ்டர்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளன. இதை ஆர்வத்துடன் பலரும் பார்த்துச்செல்ல... அதிமுகவினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

வெற்றிக்கு சிறப்பு பூஜை
செவ்வாய் கிழமை ஆண்டாளுக்கு உகந்த நாள் என்பதால், செவ்வாய் கிழமை தோறும் ஒரு அமைச்சர், ஸ்ரீவில்லிப்புத்துார் சென்று, ஆண்டாள் கோவிலில் ஜெயலலிதாவுக்காகவும், அ.தி.மு.க., வெற்றிக்காகவும், சிறப்பு பூஜைகளை செய்துள்ளனர். இந்த பூஜையில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கோகுல இந்திரா, ஆர்.வி.உதயகுமார், எம்.சி.சம்பத், வளர்மதி, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் ஆகியோர், ஆண்டாள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளனர். இவர்கள் தவிர, டி.டி.வி.தினகரன், முதல்வரின் செயலர் ராம் மோகன்ராவ், மாநில நிர்வாகி கமலக்கண்ணன் ஆகியோரும், ஈடுபட்டனராம்.

ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம்
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், தங்க விமானம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்க விமான கும்பாபிஷேகம், 2016, ஜனவரி, 20ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில், முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மதுரை மண்டலத்தில் நடைபெற உள்ள அ.தி.மு.க., தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசப்போவதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாங்களும் அடிப்போம்ல
அதிமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டிய சில மணிநேரங்களிலேயே அதற்கு எதிரான போஸ்டரை தயாரித்து விட்டனர் எதிர்கட்சியினர். தப்பிக்கட்டும் தமிழகம்... பிழைக்கட்டும் தமிழகம் என்று எதிர்போஸ்டர் ஒட்டி வாட்ஸ்அப்பில் பரப்பி வருகின்றன. நீங்க எல்லாம் எங்க இருந்துப்பா கிளம்புறீங்க... நல்லா வருவீங்கப்பா....












Click it and Unblock the Notifications