சொந்தக் கட்சி கவுன்சிலரை ஆபாசமாக திட்டிய அதிமுக எம்.எல்.ஏ.: வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியாகி பரபரப்பு !
நாகர்கோவில்: நாகர்கோவில் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவரை ஆபாசமாக பேசியதாக வெளியாகி உள்ள வாட்ஸ்அப் ஆடியே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் அதிமுக நிகழ்ச்சிகளுக்கு அத்தொகுதி எம்.எல்.ஏ.வான நாஞ்சில் முருகேசனுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகர்கோவில் நகராட்சி 12 வது வார்டு குளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏவான நாஞ்சில் முருகேசன் பெயர் இடம் பெறவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து ஆத்திரமடைந்த நாஞ்சில் முருகேசன், 12 வார்டு கவுன்சிலர் மணிகண்டனை போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாக வாட்ஸ்அப் உரையடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஒருவருக்கொருவர் சரமாரியாக திட்டுவதாக உரையாடல் நீள்கிறது. இருப்பினும் எப்போது இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் உட்கட்சி பூசல் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே களியக்காவிளை இன்ஸ்பெக்டர் சாம்சனை அதிமுக ஒன்றியச் செயலாளர் உதயகுமார் செல்போனில் மிரட்டல் விடுத்த சம்பவம் முடிவடைவதற்குள் அதிமுக எம்.எல்,ஏ நாஞ்சில் முருகேசன் சொந்த கட்சி கவுன்சிலரை ஆபாசமாக பேசியதாக வெளியாகியுள்ள உரையாடல் மீண்டும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.