குழாயில் தண்ணியடித்து ஓட்டு வேட்டையாடும் வேளச்சேரி அதிமுக வேட்பாளர்
சென்னை: வேளச்சேரி தொகுதியை தக்கவைத்துள்ள அதிமுக தீவிர முயற்சி செய்து வருகிறது. அக்கட்சியின் வேட்பாளர் நீலாங்கரை எம்.சி முனுசாமி, குழாயில் தண்ணீர் அடித்துக்கொடுத்தும், கோவிலுக்கு வரும் பக்தர்களை குறிவைத்தும் ஓட்டு வேட்டையாடி வருகிறார்.
அக்னி வெயிலின் சூடு ஒரு பக்கம் மக்களை வாட்டி வதைக்க அரசியல் கட்சியினரின் பிரச்சார அனல் வேறு மறுபக்கம் தகிக்க வைக்கிறது. எப்படி வெயிலடிச்சாலும் உங்களை சந்திப்போம் என்று வாக்காளர்களை குறிவைத்து ஓட்டு வேட்டையாடி வருகின்றனர் வேளச்சேரி தொகுதி வேட்பாளர்கள்.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் நீலாங்கரை எம்.சி.முனுசாமி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள அண்ணா நகர், காமராஜர் நகர் என 179 வார்டில் காலை 7 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கினார் முனுசாமி.

குழாயடியில் தண்ணீர்
வீட்டு அடிபம்பில் தண்ணீர் அடிக்கும் பெண்களிடம் பேசிக்கொண்டே வாக்கு சேகரித்த முனுசாமி, நான்கைந்து பெண்களுக்கு தண்ணீர் அடித்து கொடுத்தார்.

அம்மா நிறைய செய்வாங்க
புள்ளைங்களுக்கு லேப்டாப் வந்துச்சா, சைக்கிள் வந்துச்சா, அம்மா இன்னும் நிறைய செய்வாங்க என்று அதிமுக செயல்படுத்திய திட்டங்களைப் பற்றி எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்கிறார். முனுசாமி அதிகம் குறிவைப்பு பெண் வாக்காளர்களைத்தான்.

வாக்காளர்களுடன் சந்திப்பு
டீக்கடை, பூக்கடை, மளிகைக்கடை, பழக்கடை என வியாபாரிகளையும், கோயிலுக்கு வரும் பக்தர்களையும் குறி வைத்து முதல்சுற்று வாக்கு சேகரிப்பை நடத்தியுள்ளார்.

மக்கள் நிம்மதியா இருக்காங்க
வேளச்சேரி தொகுதியில் குறை சொல்லும் அளவுக்கு எதுவுமே கெடையாது. மக்கள் நிம்மதியா இருக்காங்க, போகிற இடமெல்லாம் எனக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்குது. முதல்வர் நடைமுறைப்படுத்திய சாதனை திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்கிறேன் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் முனுசாமி.
வேளச்சேரி தொகுதி தற்போது அதிமுக வசம் உள்ளது. வாக்காளர்களை வசப்படுத்தி தொகுதியை வென்றெடுப்பாரா முனுசாமி?.












Click it and Unblock the Notifications