டோன்ட் வொர்ரி...: அடுத்த பரபரப்பை கிளப்பும் அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர்
திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரியின் பிறந்த நாள் ஜனவரி 30-ந் தேதி வருகிறது. அதனை சிறப்பாகக் கொண்டாட அவரது ஆதரவாளர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஜனவரி 30-ந் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அழகிரி ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டினர். இது திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனவரி 2-ந் தேதி இரவு திமுக தலைவர் கலைஞர் எச்சரித்தார். அதனைத் தொடர்ந்து அழகிரி ஆதரவாளர்கள் சிலர் மன்னிப்பு கேட்டனர்.
அதனைத் தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட திமுக கூண்டோடு கலைக்கப்பட்டது. அப்படியும் அழகிரி ஆதரவாளர்கள் ஓய்ந்துவிடவில்லை. அடுத்த கட்ட போஸ்டராக, "டோன்ட் வொர்ரி" என்று மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
மதுரை மாநகராட்சி திமுக கவுன்சிலர் முபாரக் மந்திரி இந்த போஸ்டரை ஒட்டியுள்ளார். இதனால் மதுரையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.