விழுந்து விழுந்து ஜெ.வை வாழ்த்தும் பா.ஜ.க; அ.தி.மு.கவுடன் கூட்டணியா? மழுப்பும் தமிழிசை....
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை 'செய்யப்பட்ட' அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர்களும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களும் விழுந்து விழுந்து வரிசையாக வாழ்த்து தெரிவிக்கின்றனர். தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசையோ 'வாய்ப்பு' கிடைத்தால் ஜெயலலிதாவை நேரிலேயே வாழ்த்துவேன் என்கிறார். அதே நேரத்தில் அண்ணா தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி அமையுமா என்று கேள்வி எழுப்பினால் மழுப்பலாக பதிலளிக்கிறார் தமிழிசை சவுந்திரராஜன்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி நேற்று விடுதலை செய்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்தினார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், நஜ்மா ஹெப்துல்லா ஆகியோரும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த வழக்கில் முன்பு ஆஜரானவரும் தற்போதைய மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத்தோ, நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா தி.மு.க. எம்.பி.க்களை கட்டி ஆரத் தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜனோ, ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்ததோ, வாய்ப்பு கிடைத்தால் நேரில் சென்று ஜெயலலிதாவை வாழ்த்துவோம் என்றும் கூறினார்.
இதனால் அண்ணா தி.மு.க.- பாரதிய ஜனதா இடையே கூட்டணி உருவாகும் என்று பரவலாக கருத்து உருவானது.
இதனிடையே தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்தை சந்திப்பதற்காக இன்று தமிழிசை சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது சென்னை விமானநிலையத்தில் தமிழிசையிடம் அண்ணா தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா விடுதலைக்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து இருப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுத்துள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றால் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
அப்போது அண்ணா தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். கச்சத்தீவை மீட்பது குறித்து சட்டப்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. இந்த மசோதா நாட்டின் வளர்ச்சிக்கு உகந்த மசோதா என்றார்.












Click it and Unblock the Notifications